“ம்மா.... ம்மா”

 

லே சம்முவம்! இந்த மாடு நிக்கிற நெல ஒண்ணுஞ் சரியில்லய. இன்னிக்கே ஈனிரும் போலுக்கே”

வயற்காட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பனங்காய்களை சீவல் சீவல்களாய் வெட்டிப் போட்டுக்கொண்டிருந்த சண்முகம் நிமிர்ந்தார். கையில் வெள்ளிப்பூண் போட்ட தடியோடு வேல்த்துரை நின்றிருந்தார். பக்கத்தில் வாழைப்பழத்தோலோடு ஒரு சிறுவன். செருப்பு போட்டிருந்தான்.

“ஆமய்யா.... நானும் அப்பவே கவனிச்சிட்டேன். ராவுக்குள்ள அனேமா ஈனிரும். ஆமா இது யாரு? நம்ம பேரனுங்களா! ராசா.. என்னய ஞாவம் இருக்கா?”

“அவன் தலையை ஒரு பக்கம் கோணி கூச்சத்தோடு நெளிந்து சிரித்தான். முருங்கை மர உச்சியிலிருந்து கிறிச்சிட்டுக் கொண்டிருந்த பஞ்சிட்டாங் குருவியின் குரல் அவன் கவனத்தை ஈர்க்க, மரத்தில் தேட ஆரம்பித்தான்.

“மெட்ராஸ்லயிருந்து சுசிலாம்மாவும், மாப்பிள்ள அய்யாவும் வந்திருக்காங்களாய்யா?”

“ஆமா. மத்தியானம் பன்னெண்ட்ர மணி வண்டிக்கு வந்தாங்க..”

“த்ழாழ்ழா... ழழம்பூ... ச்ழாப் ழாழ்லா?”

“சாப்லாம். நாளைக்கு கடம்பூ சாப்லாம். ஏண்டா... சுரேஷ் இப்படி வாழப்பழம் முழுசயும் வாயில வச்சிட்டுக் கஷ்டப்படுற”

“ராசா...! அந்தத் தோல இங்கத் தந்துருங்க. காமுக்கு கொடுக்கலாம்”

“சுரேஷ் சண்முகத்திடம் கொடுக்காமல் தானே தூர நின்று வாழைப்பழத்தோலை காமுவை நோக்கி எறிந்தான். சாணியும், மூத்திரமுமாய்க் கிடந்த தரையில் போய் அது விழுந்தது. புஸ்ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு தலையை அந்த இடத்தை நோக்கிக் கொண்டு சென்று, கருப்பில் பளபளத்த முக்குப்பகுதி சிணுங்க, பார்த்தது. லாவகமாய் நாக்கால் ஒரு சுழற்று சுழற்றி வாழைப்பழத்தோலை எடுத்துக் கொண்டது.

“தாத்தா! நா பக்கத்துல போனா மாடு முட்டுமா...”

“ஆமா முட்டும். வெயில்ல நிக்காத வீட்டுக்குப் போ”

“இல்ல ராசா! தாத்தா சும்மாச் சொல்றாங்க. இப்படி ஏங்கிட்ட வாங்க. காமு யாரையும் முட்ட மாட்டா”

சுரேஷ் ஆசைப்பட்டான். நடுக்கம் இருந்தது. வீட்டுப்பக்கம் ஓடிவிட்டான்.

“இந்த தடவை மாடு கொறஞ்சது அஞ்சு லிட்டராது தரும்னு நெனைக்கேன். எப்டி சம்முவம்”

“தரும்யா”

“இன்னிக்கு வெள்ளிக்கிழம்மல்லா? சிவங்கோயிலுக்கு கம்பர் வருவார். ஏழு மணிக்குப் போலப் போயி பாத்து பால் கறக்க வரணும்னு சொல்லிப்புடு. மாசம் இருபதுன்னேப் பேசு. கையோட வைக்கோக்கட்டுத் தெருவுக்கும் போயி காயாமொழியாக் கிட்ட மாடு ஈன்ர மாரி இருக்குன்னுச் சொல்லிரு. அப்புறம் அவ தேட்டர் கீட்டர்னு படம் பாக்கப் போயிருவா. அவதான் இந்த விஷயத்துல கைகாரி. கைராசிக்காரியுங்கூட...”

“சரிய்யா. காமுக்குத் தவுடு புண்ணாக்குல்லாம் வாங்கணும். பருத்திக் கொட்டையுந் தீந்துட்டு”

“பூமணிக்கிட்ட சொல்லிர்றேன். துட்டுத் தருவா. மூக்கங்கடைலப் போயி வாங்கிரு. வழப்பழமும் வாங்கிக் குடு. பால் நெறையாக் கறக்கும். சம்முவம்! அப்படியே நாளைக்கு கொத்தனாரக் கூட்டிட்டு வரணும் பாத்துக்க. தெக்குக் கரைல சொவரு கீறல் விட்டாப்பல இருக்கு. அத இடிச்சிட்டுப் புதுசா கட்டச் சொல்லணும். வீட்லயும் இடிஞ்சது தவுந்தப் பூசணும். அம்மங்கொட. அடுத்த வெள்ளி கோயில்ல பாட்டுல்லா.... நாளை நாளன்னிக்குள்ள மவனும் மருமவளும் கோயம்புத்தூர்லயிருந்து வந்துருவாங்க”

சண்முகத்தின் அடுத்த சரியாவுக்குக் கூட காத்திராமல், டக்டக்கென தடி அதிர நடந்தார். அவருக்கு சர்க்கரை வியாதி. டாக்டர் தினந்தோறும் நடக்கச் சொல்லியிருக்கிறார்.

ஒரு பெரிய வேப்ப மரம். சின்னதாய் பெரிதாய் முருங்கைகள். மஞ்சனத்தி, வாடாச்சி, கொய்யா என வளவு விசாலமாய் கிடக்கிறது. அங்கங்கே தரையில் குப்பைமேனி கீரைச்செடிகள். கக்கூஸ் பக்கத்தில் தக்காளிச் செடிகள் தானே வளர்ந்து நிற்கின்றன. எல்லாவற்றுக்கும் நடுவே தோரணையாய் நின்றிருந்த வைக்கோல் படப்பு. சண்முகம் மாட்டுத்தாவணியையே பார்த்துக்கொண்டு இருக்கிறார். எப்போதோ போட்ட பனைஓலைக் கூரை. சுருங்கி துவண்டிருந்தது. எதோ ஒரு மரியாதைக்குத்தான் இன்னமும் இருந்தது. நட்டுக்கால்களுக்கு கரையான் மண்ணால் சட்டை போட்டிருந்தது. கீழே சுண்ணாம்பால் பூசிய தளம் பிய்ந்து பிளந்து போயிருக்க சாணியும், மூத்திரமும் தேங்கி சொறி சிரங்குகளாய் காட்சியளித்தது. சண்முகம் தினமும் கழுவி விட்டுத்தான் பார்க்கிறார். பள்ளங்கள் இருப்பதால் அவர் மெனக்கெட்டும் புண்ணியமில்லை. சிமெண்ட்டாலான சமதளம் போட்டால் எல்லாம் சரியாகும்.

வெட்டிய பனஞ்சீவல்களை கொண்டுபோய் காமுவிடம் நீட்டி, மறுகையால் அவள் முதுகைத் தடவிக் கொடுத்தார். சீவல்கள் அலட்சியப்படுத்தப்பட்டன. அந்த இதமானத் தடவலையும் புறக்கணித்து பெரிய வயிறோடு அங்குமிங்குமாய் தத்தளித்தது. இவர் காமுவையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். ச்சே! எப்படி இருப்பா..?

முன்னங்கால்களை மடக்கி, பின்னங்காலை வசதியாக ஒரு பக்கம் நீட்டி, உடம்பு ஒருக்களித்திருக்க, கம்பீரமாய் உட்கார்ந்திருப்பாள். சாந்தமாய் கண்னை மூடிக்கொண்டு மெய்மறந்து அசைபோட்டுக்கொண்டிருப்பாள். அந்த வால் மட்டும் மெதுவாக.... அவள் முதுகில் புரண்டு சின்னக் குழந்தையாட்டம் கொஞ்சிக் கொண்டிருக்கும். அந்த அழகான அமைதி இப்போது இல்லை.

ஈக்களும், கொசுக்களுமாய் காமுவை முற்றுகையிடும்போது ஒரு போர்வாள் போல அவள் வால் நிமிர்ந்து சுழன்று விரட்டும். கழுத்துப்பக்கம் தாக்கப்பட்டால் தலையை இரைந்துகொண்டு திருப்பி அச்சுறுத்தி விரட்டும். சிலசமயம் அந்தந்த பிரதேசங்களில் மட்டும் தோல்பகுதி வெட்டியிழுத்து ஈக்களையும், கொசுக்களையும் உலுப்பிவிடும். அந்த அக்கறையும் இப்போது இல்லை.

சமையல்கட்டுக்கு வெளியே இருக்கிற திண்டில் உட்கார்ந்து சாப்பிடும்போது காமுவின் நினைவாகவே இருந்தார். இந்த வீட்டுக்கு கன்னுக்குட்டியாய் அவள் வந்ததிலிருந்து இவருக்குத் தெரியும். கட்டியிருக்கிற கயிற்றை இழுத்து அவிழ்த்துக்கொண்டு அவள் அம்மாவிடம் போய் சுத்தமாய் பாலைக்குடித்து விடுகிற அழகு தெரியும். அப்போதெல்லாம் பூமணியம்மாள் காட்டுக் கத்தல் போட்டிருக்கிறாள். சமயத்தில் வேல்த்துரை கம்பெடுத்து அடித்து விடவும் செய்வார். காமு அதற்கெல்லாம் அசந்துவிட மாட்டாள். பாசத்திற்கு முன்னே கயிறெல்லாம் எம்மாத்திரம்?

வளவுப்பக்கம் போய் கைகழுவும்போது பார்த்தார். காமு கொதித்துப் பொங்குகிற பாலைப்போல நிலைகொள்ளாமல் இருந்தாள். புஸ்... புஸ்ஸென்று  இரைந்தாள். மரத்திலிருந்து வேகமாய் பறக்க ஆரம்பிக்கும் ஒரு பறவையின் சிறகைப் போல அவள் காதுகள் இரண்டும் படபடவென்று அடித்துக் கொண்டன. சண்முகம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே காமுவின் இந்த அவஸ்தைகள் அதிகரிக்க அரற்ற ஆரம்பித்தாள். இதயத்தை அரிக்கும்படியாக “ம்மா...ம்மா..” என்று கூக்குரல் போட்டாள். சண்முகம் காயமொழியாளைக் கூப்பிட ஓடினார்.

 

திமுதிமுவென கூடி விட்டார்கள்.

சாயங்காலக் காற்றில் இலைகள் மெலிசாய் அசைந்து கொண்டிருந்தன. சுவரின் மேல் வரிசையாய் நட்டிருந்த கண்ணாடிச்சில்லுகள் எல்லாம் சூரிய வெளிச்சத்தை விழுங்கிக்கொண்டு கார்த்திகை தீபங்களாய் ஜொலித்தன. இரண்டு அணில்களின் கீச்... கீச்கள் தொடர்ந்து எங்கிருந்தோ மாறி மாறி கேட்டுக்கொண்டேயிருந்தன. கீழே தெரிந்த கூட்டத்தைப் பார்த்து என்னமோ எதோ என்று பதறியபடி வேப்பமரத்தில் கட்டியிருந்த கூட்டைச் சுற்றி காக்கைகள்.

“ம்மா.... ம்மா..” அடிவயிற்று முனகல் காமுவிடமிருந்து. அவள் பின்பக்கத்தில் காயாமொழியாள். கூட இரண்டு பேர்.

வேல்த்துரை கொஞ்சம் தள்ளி ஈஸிச்சேர் போட்டு சாய்ந்திருந்தார். வெத்திலையை குதப்பிக் கொண்டிருந்தார். அவர் மகள் சுசிலா தன் கைக்குழந்தை அழுவதையும் பொருட்படுத்தாமல் அக்கம்பக்கத்து முனியம்மா, இசக்கிகளுக்கு ஃபிரிஜ்ஜையும், டி.வியையும், கேஸ் ஸ்டவ்வையும் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தாள். கூடவே அவ்வப்போது “யப்பா... என்னா புழுக்கம்..” என்று கஷ்டப்பட்டுக் கொண்டாள். எல்லோரும் போனபிறகு தன் மகளுக்கு திருஷ்டி சுற்றிப் போடவேண்டும் என்று பூமணியம்மாள் நினைத்துக் கொண்டாள். சுரேஷ் அதிசயமாய் காயாமொழியாளையும், காமுவையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான். அவனை அந்த இடத்தை விட்டுக் கிளப்புவதற்கு வேல்த்துரை பலவித முயற்சிகள் செய்து பார்த்தார். அவன் அசைவதாக இல்லை.

மெல்ல மெல்ல பனி உருண்டையாய் வர.... முன்னங்கால்கள் இரண்டும் சேர்ந்து கை கூப்பியபடி.... காற்று வெளியில் அந்த சின்னஞ்சிறு ஜீவன் எட்டிப் பார்க்கிறது. காமுவின் இரத்தமும், சதையும்!

காயாமொழியாள் அந்த முன்னங்கால்களைப் பற்றி ரொம்ப ஜாக்கிரதையாய் வெளியேக் கொண்டு வந்தாள். அந்தக் கணத்தில்....

“ம்மா... ம்மா..”

காமு கதறினாள். ஒவ்வொரு அணுவிலும், இரத்த நாளத்திலும் போராட்டம். அலறல் அந்த இடத்தையே உலுக்கியது. சண்முகம் முகத்தைப் பொத்திக் கொண்டார். இல்லாத கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டார். இத்தனைக் கஷ்டங்களும், துடிதுடிப்பும் சட்டென முடிந்து காமு அமைதிப்பட வேண்டும் போலிருந்தது.

இதோ முடிந்துவிட்டது. காமு ஆர்ப்பரித்து எழுந்து கொண்டாள். சந்தோஷத்தோடு நிம்மதியாய் வானம் பார்த்து கூவினாள். “ம்மா...ம்மா..”

சாய்ந்து உட்கார்ந்திருந்த வேல்த்துரை நிமிர்ந்தார். சாம்பல் போட்டு வைத்திருந்த துப்பட்டியில் வெற்றிலை துப்பினார். தாமரைச்சிங்கம் சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். சுரேஷுக்கு அந்த வாடையே பிடிக்காது. தாத்தாவே அருவருப்பாய் படுவார். மற்ற சமயம் என்றால் அந்த இடத்தை விட்டு ஓடியிருப்பான். இப்போது மூக்கை பொத்திக்கொண்டு கொஞ்சம் தள்ளிப்போய் மட்டும் நின்று கொண்டான்.

கன்னுக்குட்டியை துடைத்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்த காயாமொழியாள் “அய்யய்யோ..” என்றாள்.

“என்னக் காயாமொழியா...?”

“அண்ணாச்சி! கன்னுக்குட்டி செத்தே பொறந்துருக்கு..”

“அடக்கருமமே!”

சில நிமிடங்கள் பெரிய மௌனம். காயாமொழியாள் கையைக் கழுவினாள்.

“அம்மங்கொடையும் அதுவுமா பாலுக்குத் தட்டே இருக்காதுன்னுல்லா நெனைச்சேன். கன்னுக்குட்டி இலலேன்னா எழவுமாடு பாலே தராதே..” என்றாள் பூமணியம்மாள்.

“அப்பா ஏங்குழந்தைக்கு நாளைக்கு சம்முவம் பஜார்ப்பக்கம் போனான்னா இன்னொரு ஃபாரெக்ஸ் வாங்கிட்டு வரச் சொல்லியிருங்கப்பா..”

“ச்சே! செனையோட இருக்கும்போதே இந்த மாட்ட வித்துருக்கணும். நல்ல வெலைக்குப் போயிருக்கும்..உம்..”

“தாத்தா கடம்பூ கெடைக்காதா”

“கெடைக்குண்டா. சும்மாயிரேன். லே.. சம்முவம்! ஆறுமுவத்தக் கூப்பிட்டு இந்தக் கன்னுக்குட்டித் தோலையெடுத்து வைக்கோல்ல பொம்மக் கன்னுக்குட்டி செய்யச் சொல்லணும். அப்பதான் அதப் பக்கத்துல நிக்கவச்சு கொஞ்ச நஞ்சமாவது பாலைக் கறக்கலாம்...”

“எங் கைராசியில இதுதா மொதத்தடவ. இதுவரைக்கும் நடந்ததேக் கெடையாது”

சண்முகம் காமுவையே பார்த்துக்கொண்டிருந்தார்.

தன்மேல் பல நூறு கொசுக்களும், ஈக்களும் மொய்த்திருக்க, உயிர்க்கொடி அறுந்து பின்புறம் மண்ணெல்லாம் ஒட்டித் தரையோடு தொங்கிக் கொண்டிருக்க... உலகையே மறந்து... தன் குழந்தை இறந்து போனதுகூடத் தெரியாமல், மிகுந்த வாஞ்சையோடு ‘அதை’ நாக்கால் வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தாள் காமு.

“ம்மா...ம்மா..”

(1987ல் எழுதிய சிறுகதை)

*

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. என்னமாய் ஒரு சிறுகதை.... மனதை நெகிழ வைத்திருக்கிறது. இதுதான் யதார்த்தம். வாழ்த்துக்கள் சார், உண்மையில் அற்புதம்.

    பிரபாகர்,

    பதிலளிநீக்கு
  2. கதை மிகவும் அருமையாக உள்ளது, நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  3. காட்சிகளின் விவரிப்பு, கதை முடிந்த விதம் அனைத்துமே அருமை.

    “அப்பா ஏங்குழந்தைக்கு நாளைக்கு சம்முவம் பஜார்ப்பக்கம் போனான்னா இன்னொரு ஃபாரெக்ஸ் வாங்கிட்டு வரச் சொல்லியிருங்கப்பா..” //

    இந்தக் கன்னுக்குட்டித் தோலையெடுத்து வைக்கோல்ல பொம்மக் கன்னுக்குட்டி செய்யச் சொல்லணும். அப்பதான் அதப் பக்கத்துல நிக்கவச்சு கொஞ்ச நஞ்சமாவது பாலைக் கறக்கலாம்...” //

    முகத்திலறைகிறது யதார்த்தம்.

    பதிலளிநீக்கு
  4. //“அம்மங்கொடையும் அதுவுமா பாலுக்குத் தட்டே இருக்காதுன்னுல்லா நெனைச்சேன். கன்னுக்குட்டி இலலேன்னா எழவுமாடு பாலே தராதே..” என்றாள் பூமணியம்மாள்.

    “அப்பா ஏங்குழந்தைக்கு நாளைக்கு சம்முவம் பஜார்ப்பக்கம் போனான்னா இன்னொரு ஃபாரெக்ஸ் வாங்கிட்டு வரச் சொல்லியிருங்கப்பா..”

    “ச்சே! செனையோட இருக்கும்போதே இந்த மாட்ட வித்துருக்கணும். நல்ல வெலைக்குப் போயிருக்கும்..உம்..”

    “தாத்தா கடம்பூ கெடைக்காதா”

    “கெடைக்குண்டா. சும்மாயிரேன். லே.. சம்முவம்! ஆறுமுவத்தக் கூப்பிட்டு இந்தக் கன்னுக்குட்டித் தோலையெடுத்து வைக்கோல்ல பொம்மக் கன்னுக்குட்டி செய்யச் சொல்லணும். அப்பதான் அதப் பக்கத்துல நிக்கவச்சு கொஞ்ச நஞ்சமாவது பாலைக் கறக்கலாம்...”

    “எங் கைராசியில இதுதா மொதத்தடவ. இதுவரைக்கும் நடந்ததேக் கெடையாது”

    சண்முகம் காமுவையே பார்த்துக்கொண்டிருந்தார்.

    தன்மேல் பல நூறு கொசுக்களும், ஈக்களும் மொய்த்திருக்க, உயிர்க்கொடி அறுந்து பின்புறம் மண்ணெல்லாம் ஒட்டித் தரையோடு தொங்கிக் கொண்டிருக்க... உலகையே மறந்து... தன் குழந்தை இறந்து போனதுகூடத் தெரியாமல், மிகுந்த வாஞ்சையோடு ‘அதை’ நாக்கால் வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தாள் காமு.//

    ஒரு நிகழ்ச்சி; பல விளைவுகள்.
    “தக்கார் தகவிலார் என்பது அவரவர்
    எச்சத்தால் காணப் படும்”

    அருமை; வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை!!
    ஒரு நொடிக்குள் எப்படி மாறுகிறது உலகம்!! காமுவும், அந்த மனிதர்களும் மனதில் உறைந்துபோயிருக்கிறார்கள்!!

    பதிலளிநீக்கு
  6. தலைப்பைப் பார்த்தவுடன் முதல் வரியும், முதல் வரியைப் பார்த்ததும் நினைவுக்கு வரும் உனது எல்லாக்கதைகளும்,
    எப்போது பட்டாலும் சிலிர்க்கிற பூங்காற்று.

    பதிலளிநீக்கு
  7. சிறுகதை மிகவும் யதார்த்தம்.அருமை; வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. நெகிழ்வான பதிவு....இறுதி வரிகளில் மனம் கணக்கிறது,

    பதிலளிநீக்கு
  9. சின்ன வயதில் எருமை மாடு கன்று ஈனும் போது அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.
    அப்படியே தத்ரூபமாக பதிந்திருக்கிறீர்கள்.

    படிக்க படிக்க அந்த மாட்டின் போராட்டம் அடிவயிற்றை கலங்கடித்தது...

    எனக்கு நினைவு தெரிந்து எங்கள் தோட்டத்தில் கன்று இறந்ததில்லை..

    மற்ற தோட்டங்களில் பொம்மைக் கன்று இருப்பதைப் பார்த்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  10. என்னவோ சில நிமிடங்கள் கிராமத்துக்கே போய்வந்த மாதிரி இருக்கு! அருமை ஐயா!

    பதிலளிநீக்கு
  11. பிரபாகர்!
    பித்தனின் வாக்கு!
    அமிர்தவர்ஷிணி அம்மா!
    ஹரன்!
    சந்தனமுல்லை!
    காமராஜ்!
    ரவிக்குமார்!
    ஆரூரன்!
    கதிர்!
    மண்குதிரை!
    தமிழ்நாடன்!

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அழகிய மொழிநடையும் வருணனைகளும் மாதவராஜிக்கே உரித்தானவை.

    உங்களுடைய சிறுகதைகள் அனைத்தையும் ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறீர்களா ???

    பதிலளிநீக்கு
  13. செய்யது!
    மிக்க நன்றி.
    தொகுப்பு போட்டு இருக்கிறேன். வம்சி பதிப்பகத்தால் ‘போதி நிலா’ என்ற பெயரில் வெளி வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. நல்ல வேலை மக்கா..வர இயலாமல் போய்ட்டது...எழத்தில் என்னை கிறங்க செய்து கொண்டே இருக்கிறீர்கள் மாதவன்.நான் கேட்க்கனும் என இருந்த கேள்வியை,நண்பன் செய்யது கேட்டு விட்டார்.மக்கா,எனக்கு இந்த தொகுப்பு வேணும்.அனுப்பி தர இயலுமா?சவுதியில் இருப்பதால்,ஊர்வரும்போது தொகுப்பு கிடைத்து வாசிக்க தாமதமாகும்.என் மின் முகவரி,என் முகவரி,இங்கு பதிகிறேன்.எப்படியாவது அனுப்ப முயற்ச்சி செய்யுங்கள் மாதவன்.மற்ற யாரிடமும் கேட்டு வாங்குவதை விட அடிவார கொள்முதல் ஆக சிறந்ததுதானே!..பொருள்,நேரத்துக்கு கிடைக்கும்.மின் கடிதத்தில்,பணம் அனுப்பும் முகவரி தெரிவியுங்கள் மாதவன்.இனி,காமராஜிடமும் கேட்கனும்.வேண்டியதில்லைதானே...அவர் தொகுப்பும் வந்திருக்கு எனில் அந்த விபரங்களையும் தெரிவியுங்களேன்.
    மின் முகவரி..
    rajaram.b.krishnan@gmail.com

    முகவரி..

    b.rajaram,
    post box 2331,
    al-khobar-31952,
    K.S.A.

    நன்றி மாதவன்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!