மாதவராஜ் பக்கங்கள் 9

சூரியன் மறைந்த பிறகு, வெடித்து வறண்டு கிடக்கும் தங்கள் வயல்வெளிகளுக்கு கல்யாணமாகாத தங்கள் பெண் குழந்தைகளை நிர்வாணமாக அனுப்பி வைக்கிறார்கள் விவசாயிகள். மாடுகள் முன்செல்ல ஆதிக்குரலெடுத்து அந்தப் பெண்கள் குலவையிட்டவாறு, கலப்பையினால் மண்ணைக் கீறிச்செல்கின்றனர். வயதான பெண்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றனர்.

 

வலைப்பக்கங்களிலும், பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி ‘funny' ஆகவும்,  விஞ்ஞானத்துக்கு புறம்பானதாகவும் மட்டுமே பார்க்கப்படுவதும், விவாதிக்கப்படுவதும் எரிச்சலடைய வைக்கின்றன.

 

நாட்டில் 141 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்று மாநிலத் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தகவல் தெரிவித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், பீகாரில் இப்படியான காட்சிகள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. தென்மேற்கு பருவ மழை பொய்த்துள்ளதால், குறுவை சாகுபடியில் 60 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பதை மக்கள் தயாராகிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துக்கொண்டு இருக்கும்போது, இன்னொரு புறத்தில் அந்தக் கிராமத்து மனிதர்கள் இப்படி வருணபகவானிடம் முறையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். உற்பத்தி சார்ந்த விவசாயத்தை ஏறத்தாழ புறக்கணித்து, பங்குச் சந்தையை  மட்டுமே தேசத்தின் வளர்ச்சிக்கு அளவுகோலாக பார்ப்பவர்கள் இந்த செய்திக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

 

மழைகுறித்த விஞ்ஞான அறிவு பெற்றிராத காலங்களில், மழையை மட்டுமே நம்பியிருந்த காலங்களில், தங்கள் வாழ்வின் ஆதாரங்களை வேண்டி பாமர மக்கள் தங்களுக்குத் தெரிந்த நம்பிக்கையில் இது போன்ற காரியங்களை செய்திருக்கலாம். முறையிடுவதற்கு கடவுள்கள் மட்டுமே இருந்த ஆதிநாட்களிலிருந்த பழக்க வழக்கங்கள் ஜனநாயகம் மலர்ந்திருக்கும் இந்த நாட்களிலும் பயன்படுத்தப்படுவது எவ்வளவு எதிர்மறையானவை. விஞ்ஞானமும், மக்களாட்சித் தத்துவமும் வளர்ந்த ஒரு நாட்டில், இந்தச் சடங்குகள் இன்னமும் தொடர்கதையாய்  இருப்பது வேதனைக்குரியவை. இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வதாக மார்தட்டிக்கொள்ளும் ஒரு தேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அவமானகரமானவை.

 

மழை பொய்த்துப் போகாத காலங்களில் மட்டும் அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது. இங்கு?  பாலாறும், தேனாறுமாக அவர்கள் வீடுகளில் ஒடிக்கொண்டு இருந்தது?  உயிர் வாழ மட்டுமே முடிந்திருக்கும். அவ்வளவுதான். அதற்கும் ஆபத்து வருகிறபோது, தங்கள் பெண்குழந்தைகளை இப்படி நிர்வாணமாக வயலுக்கு அனுப்பத் துணிகிறார்கள்.

 

மழை நன்றாக பெய்த காலங்களிலும், இந்த தேசத்தில் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கான புள்ளி விபரங்களையெல்லாம் கொடுத்துத்தான் உண்மையென காட்ட வேண்டிய அவசியமில்லை. அரசின் அறிக்கைகளே முனகிக்கொண்டு இருக்கின்றன. முறையான நிலச்சீர்திருத்தம், விளை பொருட்களுக்கு நியாயமான விலை, கொள்முதல் செய்வதில் அரசின் முறையான தலையீடு இல்லாது போனதே இங்கு சம்சாரிகளின் பரிதாபகரமான நிலைமைக்கு முக்கியக் காரணமாகிறது.

 

வறட்சி பற்றிப் பேசிய பிரதமர், மழை பொய்த்த காலங்களில் மாற்றுப் பயிர் குறித்து யோசிக்க வேண்டும் என்று போகிற போக்கில் குறிப்பிட்டு இருக்கிறார். அதுதானே இந்த மண்ணில் விவசாய முறையாக இருந்தது. அதை யார் இங்கு குழிதோண்டி புதைத்தது?  இரண்டு மூன்று பஞ்சங்களையும் தாங்கும் பயிர்களெல்லாம்  கண்ட, கொண்ட பூமிதானே இது? இவர்களது பசுமைப் புரட்சியில் அவைகள்தானே முதலில் பலி கொடுக்கப்பட்டன? வரலாற்றை மறைக்கிறவர்களே இங்கு வாய் கிழியப் பேசுகிறார்கள்.

 

இதையெல்லாம் சிந்திக்கிற போது,  எளிய அந்த மக்களின் இந்தச் செய்கைகள் வேடிக்கையாகவா இருக்கின்றன? வேதனைகளையே தருகின்றன. இதனை மூடநம்பிக்கை என்றெல்லாம் சொல்லிவிட்டு ஒதுங்கிவிட முடியவில்லை. பாவப்பட்ட அவர்கள் என்ன செய்வார்கள். வாழ்வதற்கு எதாவது ஒரு வழி எப்படியாவது  ஏற்படாதா என நம்பிக்கைகளைத் தேடிக்கொண்டு இருக்கும் மனிதர்களே அவர்கள்.

 

மழை வரும் வரை அந்தப் பெண்கள் இப்படி நிர்வாணமாக உழுதுகொண்டே இருக்க வேண்டுமாம். கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும், வானம் நோக்கிக் கத்தத் தோன்றுகிறது....”மழையே சீக்கிரம் வா!”

 

வருணபகவான் மனமிரங்கினாலும் மன்மோகன்சிங் இரங்க மாட்டார் என்பது முட நம்பிக்கையில்லை.

 

*

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. என்ன கொடுமை இது மாதவ்? கேட்கவே மனம் சஞ்சலப் படுகிறது. நம் பசி தீர்க்க நிர்வாணமாகத் துணியும் செயலுக்கு அவமானப்பட வேண்டியது அவர்கள அல்ல. நாம் தான்.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  2. அரிசி ஐநூறு ரூபாய் ஆனாலும், பருப்பு ஆயிரம் ரூபாய் ஆனாலும் ஏன் என்று கேட்காமல் வாங்கும் வர்க்கம் இருக்கும்வரை விவசாயிகள் மழையின்றி,விதையின்றி,உரமின்றி வதைபடத்தான் செய்வார்கள் நம் தாய்த்திருநாட்டில்....

    பதிலளிநீக்கு
  3. "மழைகுறித்த விஞ்ஞான அறிவு பெற்றிராத காலங்களில், மழையை மட்டுமே நம்பியிருந்த காலங்களில், தங்கள் வாழ்வின் ஆதாரங்களை வேண்டி பாமர மக்கள் தங்களுக்குத் தெரிந்த நம்பிக்கையில் இது போன்ற காரியங்களை செய்திருக்கலாம். முறையிடுவதற்கு கடவுள்கள் மட்டுமே இருந்த ஆதிநாட்களிலிருந்த பழக்க வழக்கங்கள் ஜனநாயகம் மலர்ந்திருக்கும் இந்த நாட்களிலும் பயன்படுத்தப்படுவது எவ்வளவு எதிர்மறையானவை. விஞ்ஞானமும், மக்களாட்சித் தத்துவமும் வளர்ந்த ஒரு நாட்டில், இந்தச் சடங்குகள் இன்னமும் தொடர்கதையாய் இருப்பது வேதனைக்குரியவை. இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வதாக மார்தட்டிக்கொள்ளும் ஒரு தேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அவமானகரமானவை.



    மழை பொய்த்துப் போகாத காலங்களில் மட்டும் அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது. இங்கு? பாலாறும், தேனாறுமாக அவர்கள் வீடுகளில் ஒடிக்கொண்டு இருந்தது? உயிர் வாழ மட்டுமே முடிந்திருக்கும். அவ்வளவுதான். அதற்கும் ஆபத்து வருகிறபோது, தங்கள் பெண்குழந்தைகளை இப்படி நிர்வாணமாக வயலுக்கு அனுப்பத் துணிகிறார்கள்.



    மழை நன்றாக பெய்த காலங்களிலும், இந்த தேசத்தில் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கான புள்ளி விபரங்களையெல்லாம் கொடுத்துத்தான் உண்மையென காட்ட வேண்டிய அவசியமில்லை. அரசின் அறிக்கைகளே முனகிக்கொண்டு இருக்கின்றன. முறையான நிலச்சீர்திருத்தம், விளை பொருட்களுக்கு நியாயமான விலை, கொள்முதல் செய்வதில் அரசின் முறையான தலையீடு இல்லாது போனதே இங்கு சம்சாரிகளின் பரிதாபகரமான நிலைமைக்கு முக்கியக் காரணமாகிறது."

    ஒவ்வொரு வார்தைகளும் உண்மை

    பதிலளிநீக்கு
  4. இந்தச் செய்தியைப் படித்திருக்கவில்லை, நல்ல பதிவு. கடைநிலை விவசாயிகளைப் பற்றி யாருக்குக் கவலை? நாம் கடந்துகொண்டேயிருப்போம் இதுவும் ஒரு செய்தியென:((

    பதிலளிநீக்கு
  5. :(( மிகுந்த வேதனையைத் தருவதாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  6. நான் இதில் விவசாயிகளை, பொது மக்களை, என் போன்ற வாக்காளர்களை தான் குறை சொல்வேன்.

    கடந்த ஆட்சியில் மழை நீர் சேமிப்பு, வெள்ளம், விவசாய தொலை நோக்கு திட்டம் இல்லாமல் ஆட்சி நடத்திய காங்கிரஸ் தி மு க கூட்டணிக்கே வாக்குகளை விற்று விட்டு, இன்று அழுது புலம்புவதில் என்ன பயன்.

    திடீரென்று முளைக்கும் அரசியல்வாதிகளான ஜகத் ரட்சகன், சசி தரூர், அழகிரி, ரிதீஷ், மாணிக் தாக்கூர் போண்டோருக்கு வாக்கு அளித்து படவியியா கொடுத்து விட்டு இன்று அழுது என்ன பயன்.

    பதிலளிநீக்கு
  7. //இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வதாக மார்தட்டிக்கொள்ளும் ஒரு தேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அவமானகரமானவை. //

    மிகக் கொடுமை. மூடநம்பிக்கை என்று அந்த அப்பாவி மக்களை மட்டும் சாடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.

    //இரண்டு மூன்று பஞ்சங்களையும் தாங்கும் பயிர்களெல்லாம் கண்ட, கொண்ட பூமிதானே இது? இவர்களது பசுமைப் புரட்சியில் அவைகள்தானே முதலில் பலி கொடுக்கப்பட்டன?//

    இது பற்றியும் பதிவிடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  8. //அரிசி ஐநூறு ரூபாய் ஆனாலும், பருப்பு ஆயிரம் ரூபாய் ஆனாலும் ஏன் என்று கேட்காமல் வாங்கும் வர்க்கம் இருக்கும்வரை விவசாயிகள் மழையின்றி,விதையின்றி,உரமின்றி வதைபடத்தான் செய்வார்கள் நம் தாய்த்திருநாட்டில்....//

    100/100

    பதிலளிநீக்கு
  9. :( வருத்தமும் வெட்கமும் படவேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  10. அனுஜன்யா!
    ஆமாம். வருத்தப்பட வைக்கும் நிகழ்வுதான். அவமானப்பட வைக்கும் காட்சிகள்தான்.

    துபாய்ராஜா!
    ஏன் என்ற கேள்வி எழுந்தால்தான் இங்கு பல பிரச்சினைகள் தீர்ந்து விடுமே.

    குமார்!
    செல்வநாயகி!
    தீபா!
    அமிர்தவர்ஷிணி அம்மாள்!
    வருகைக்கும், வருத்தங்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.

    ராம்ஜி!
    வாக்காலர்களைக் குறை கூறும்போது அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிவிடுகிற அமைப்பு குறித்தும் யோசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும், வானம் நோக்கிக் கத்தத் தோன்றுகிறது....”மழையே சீக்கிரம் வா!”


    மிகசரியான வார்த்தை மாது வறட்சியின் கொடுமையைவிட இது போன்ற நம்பிக்கைகள் மிக கொடியதுதான்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!