நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

வலையுலகம் உலகின் மூலைகளிலிருந்தெல்லாம் நண்பர்களை தந்துகொண்டேயிருக்கிறது. முகம் தெரியாத மனிதர்கள் பிரியத்துடன் என்னைக் கவனித்துக் கொண்டே  இருக்கிறார்கள் என்னும் எண்ணம் ஒவ்வொரு பதிவை எழுதி முடிக்கும்போதும் என்னைத் தொடுகிறது. பள்ளி. கல்லூரி, வேலை என நகர்ந்த காலங்கள் எல்லாவற்றிலும் நான் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருப்பது  நண்பர்களோடுதான் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

 

ஓவ்வொரு காலத்திலும், நிலையிலும், சூழலிலும் நண்பர்கள் வட்டம் மாறிக்கொண்டே இருக்கிறது. எங்கெங்கோ, வெவ்வேறு திசைகளில் சென்றுவிட்டாலும், பால்யத்திலிருந்து அல்லது பழகிய தினத்திலிருந்து அவர்கள் தந்து கொண்டு இருக்கும் நினைவுகள் நம் ஓவ்வொருவருக்குள்ளேயும் நீரென நிரம்பி இருக்கிறது. ஒரு சிறு தாக்கம் போதும். சலனங்கள் நம்மைத் தாலாட்டுகின்றன. மனித வாழ்வின் வசீகரவெளியில் நம்மை மல்லாக்க கிடத்தி விடுகின்றன.

 

கால்ச்சட்டை போட்டுக்கொண்டு ஊரெல்லாம் அலைந்து திரிந்த அவர்களில் சிலர் இப்போதும் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த நண்பர்கள் தினத்தில் அவர்கள் எழுதிய சில கடிதங்களை, என் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் காட்ட வேண்டும் போலிருக்கிறது. (நூற்றுக்கும் மேற்ப்பட்ட கடிதங்களை இன்னமும் பாதுகாத்து வருகிறேன்.)

 

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்து முடித்து, ஊரைவிட்டுப் பிரிந்த காலங்களில் எழுதப்பட்ட இந்தக் கடிதங்கள் எனக்குள் மீட்டும் ஞாபகங்களை அப்படியே நீங்கள் அறியமுடியாதுதான். உங்களுக்குள் மீளும் அனுபவங்களை நானும் அறிய முடியாதுதான். ஆனால் நாம் அனைவருமே நட்பின் அற்புதமான தருணங்களில் சஞ்சரிக்கப் போகிறோம் என்பது தெரிகிறது.

***********

அன்புள்ள நண்பன் மாதுவுக்கு!

பொன்ராஜ் எழுதும் கடிதம். நலம் நலமறிய அவா.

ரஞ்சன் எனக்குக் கடிதம் போட்டுள்ளான். உனக்கும் போட்டிருப்பான் என நினைக்கிறேன். அழகுவேலுக்கும் கடிதம் போட்டேன். இதுவரை பதில் இல்லை.

இருவரில் யார் எப்போது வருகிறீர்கள். இரண்டுநாள் இங்கு மழை பெய்தது. அதன்பின் பூமி வானத்தை பார்த்துள்ளது. ரஞ்சன் போனபின் அருள் கடைப்பக்கம் நான் போனதில்லை

ஊரைவிட்டு வெளியே போனால்தான் ஊர் அருமை தெரியும். நம்மவரில் ஆறுமுகனேரி எனக்கே சொந்தம். ஊரில் நாம் சுற்றித் திரிந்த இடங்களைக் காணும்போது கண்களில் ஈரம் கசிகிறது.

அழகுவேலை பார்த்தாயா. என்ன செய்கிறான். நிறைய பக்கம் பக்கமாய் எழுதுவாய் என எதிர்பார்த்தேன். ஏமாற்றம்.

நாலுமாவடியில் பிரபாகர் கச்சேரி நடந்தது. பார்த்தேன். நன்றாக இருந்தது. ஒரு குறை நீ இல்லாதது. நெல்லையில் அலைகள் ஓய்வதில்லை படமும், ரெட் சன் என்ற ஆங்கிலப் படமும் பார்த்தேன். அருமையான படங்கள். அலைகள் நீ கட்டாயம் பார்க்க வேண்டும்.

சரி போன கடிதத்தில் நான் கேட்ட கேள்விக்கு ஏன் இதுவரை பதில் எழுதவில்லை.

அன்பு
பொன்ராஜ்
ஆறூமுகனேரி
9.10.81

***********

அன்பு நண்பா!

நீ நமது ஆறுமுகனேரி நினைவுகளை அருமையாக எழுதியிருந்தாய். உண்மையில் சிறு சிறு விஷயங்கள் கூட இப்போது நினைத்துப் பார்க்கையில் இனிக்கிறது. அதுவும் இந்த விடுமுறையில் நாம் நன்றாக  enjoy  பண்ணியிருக்கிறோம்.

நண்பா, அடைக்கலாபுரம் ரோட்டில் சைக்கிளில் செல்ல ஆசையாக உள்ளது. காயல்பட்டினத்தில் பிரபாகர் கச்சேரியில் அந்த பாங்கோஸ் அடிப்பவன் (புளு சட்டை) கை, வாய் செய்கைகளை கேலி செய்து எவ்வளவு சமயம் சிரித்திருப்போம்.

ஒருநாள் second year  படிக்கும்போது, காலேஜிலிருந்து  trainல் திரும்பி  stationல் இறங்கி வரும்போது, ஒருவர்  train  புறப்பட்டதும் ஓடி ஓடி ஏறமுடியாமல் கைகளை முன்னோக்கி  நீட்டியபடி நின்ற பரிதாப நில கண்டு வீடுவரை சிரித்து மகிழ்ந்தோம். இவை சிலருக்கு அசிங்கமாககூட தெரிவதுண்டு.

இங்கு இந்நிகழ்ச்சிகளை நினைத்து மகிழக்கூட சூழ்நிலைகள் அனுமதிப்பதில்லை. இங்கு அனைவரும் serious ஆக இருக்கிறார்கள். அரசியல் பேசுகிறார்கள். எப்போதாவது கூத்துக்களும் அடிக்கிறார்கள். காலேஜிக்கும், ஹாஸ்டலுக்கும் ரொம்ப தூரம். சாப்பாட்டுக்கும், வகுப்புக்கும் நடந்தே வாழ்க்கை வெறுக்கிறது. நிறைய notes  எடுக்க வேண்டி இருக்கிறது. lace maker  என ஒரு படம் பார்த்தேன். அருமை.

எனக்கும்கூட இப்போதெல்லாம் மன எண்ணங்களை கவிதையாய் வடிக்க ஆசையாய் உள்ளது. மனதில் நீங்கா காட்சிகளை ஓவியமாக வரைய ஆசையுள்ளது.

அன்புடன்
ரஞ்சன் சாலமன்
Regional Engineering College
திருச்சி
21.11.81

 

***********

அன்புள்ள மாதுவுக்கு!

நண்பன் அருள்ராஜ் எழுதும் மடல். இங்கு நான் நல்ல சுகம். அதுபோல் அங்கு உன் சுகமும் மற்றும் நம் நண்பர்கள் சுகமும் அறிய ஆசை.

ரஞ்சன் வரவால் கடையில் மீண்டும் பரபரப்பு. நானும் அவனும் உனக்குக் கவிதை எழுத வேண்டுமென முடிவெடுத்தோம்.

முதல் வரி இதோ.

மன்னனுக்கும் வரும் கவிதை
மரமண்டைக்கும் வரும் கவிதை

அதற்குமேல் எழுதாமல் நிறுத்திக்கொண்டோம். கோபப்படாதே.

சுப்பையாவும், பொன்ராஜும் கடைக்கு எப்போதாவது வருவார்கள்.
நானும், ரஞ்சனும் தூத்துக்குடியில் குடும்பம் ஒரு கதம்பம் படம் பார்த்தோம்.

அப்புறம் சித்திரை மாசம் மாரியம்மன் கோயில் கொடைக்கு நம்மூரில் நாடகம் போடுகிறோம். எனக்கு கணக்குப்பிள்ளை வேடம். வந்துவிடு.

அருள்ராஜ்
ஆறுமுகனேரி
8.3.82

***********

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

*

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. :-)) சூப்பர்!!

    //மன்னனுக்கும் வரும் கவிதை
    மரமண்டைக்கும் வரும் கவிதை //

    LOL!!

    பதிலளிநீக்கு
  3. நண்பர்கள்தின வாழ்த்துகள்!! ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  4. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .....

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் சார்... உங்களுக்கும் அனைவருக்கும்!

    பதிலளிநீக்கு
  6. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நண்பர்கள் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

    பகிர்விற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நண்பர்கள் தினத்தை - நண்பர்களின் கடிதத்துடன் இணைத்து இடுகையிட்டது வித்தியாசமாக இருந்தது. தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. (நூற்றுக்கும் மேற்ப்பட்ட கடிதங்களை இன்னமும் பாதுகாத்து வருகிறேன்.)
    உங்கள் நண்பர்களின் கடிதங்களைப் படித்ததும் என்னென்னவோ நினைவுகள் வந்து கண்கள் கலங்குகின்றன அங்கிள்.

    நானும் உங்களைப் போல் தான் நண்பர்கள், நீங்கள், அம்மு எல்லோரும் எழுதிய கடிதங்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன்.

    பேனா பேப்பர் எடுத்துக் கடிதம் எழுதுவது என்பது எவ்வளவு மகத்துவமானது என்பது வரும் தலைமுறையினருக்குத் தெரியாமலே போய் விடுமே என்ற கவலை தான் எனக்கு வருகிறது.

    அற்புதமான விஷயத்தைச் சொல்லாமல் சொல்லி உணர்த்தி இருக்கிறீர்கள்.

    உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  12. நண்பர்களின் கடிதத்தைப் போற்றிப் பாதுகாத்ததில் மிக்க மகிழ்ச்சி. நண்பர்கள் தின வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு.

    என்னென்னவோ சொல்ல நினைக்கிறோம்.எதுவும் சொல்லாமலே காலம் கடந்துகொண்டேயிருக்கிறது.
    பழைய நினைவுகளை கிளர்துவதாயிருக்கிறது தோழர் இந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  15. வருகைப் புரிந்தவர்களுக்கும், நண்பர்கள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!