அந்தக் கெட்ட வார்த்தை

அவனிடம் ஒரு சாக்லெட்தான் இருந்தது. அவள் அதைக் கேட்டாள். “உனக்கு நாளைக்குத் தர்றேன்” என்று அவன் வேகமாக வாயில் போட்டுக் கொண்டான்.

“ச்சீ போடா, இனும ஏங்கூட பேசாத..” என்று அவள் போய்விட்டாள். வகுப்பிலும் முறைத்துக் கொண்டுதான் இருந்தாள். மதியம் சாப்பிட்ட பிறகு, அவள் அருகில் போய் நின்றான். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஏங்கூட பேச மாட்டியா?’ என்றான். தனது இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தை விரித்து முகத்தை மறைத்துக் கொண்டாள் அவள்.

சாயங்காலம் மணியடித்துக் கிளம்பும்போது அவள் அவனருகில் வந்து “நேத்து “நீ ஏங்கிட்டச் சொன்ன கெட்ட வார்த்தையை நாளைக்கு மிஸ்கிட்ட சொல்றேன் பாரு” என்று விரலை பத்திரம் காட்டிச் சொன்னாள்.

“ப்ளீஸ்பா... பிளீஸ்பா... சொல்லாதே...” என்று அவன் பாவம் போல் கெஞ்சினான்.

“கண்டிப்பாச் சொல்வேன்..” வெளியே நின்றிருந்த வேனை நோக்கி ஓடினாள்.

ஆட்டோவில் பிதுங்கி வீடு வந்த சேர்ந்தவனுக்கு முகம் வெலவெலத்து இருந்தது. வந்ததும் வராததுமாய் சைக்கிளை எடுத்துக் கொண்டு தெருவில் ஓட்டுகிறவன், இன்று ஒரு அறையின் மூலையில் போய் தனியாய் உட்கார்ந்து கொண்டான். யூனிபார்மைக் கூட கழற்றவில்லை.

“என்னப்பா... ஒருமாதிரியா இருக்க..” என்றார் அம்மா.

“ஒண்ணுமில்லம்மா...” என்றான். குரல் கம்மியிருந்தது.

“ஸ்கூல்ல மிஸ் சத்தம் போட்டாங்களா?’”

இல்லயென்பதாய் தலையாட்டினான்.

அம்மா அவன் நெத்தியில் கைவைத்துப் பார்த்தார். கதகதவென்று இருந்தது. “புள்ளைக்கு காச்சலடிக்கு..” என்றபடி கைவசமிருந்த மாத்திரை ஒன்றைக் கொடுத்தார். பாடப் புத்தகங்களை விரித்துக் கொண்டு உட்கார்ந்தான். கொஞ்ச நேரம் கழித்து அம்மா திரும்பவும் அவன் நெத்தியில் கை வைத்துப் பார்த்தார். சூடு கூடித்தான் இருந்தது. அப்படியே அவனைத் தூக்கிக் கொண்டு அடுத்த தெருவில் இருந்த கிளினிக்கிற்குப் போனார்.

ஊசி போட்டு, மாத்திரைகளை வாங்கிக் கொண்டு விட்டுத் திரும்பும்போது “அம்மா நாளைக்கு நான் ஸ்கூலுக்கு போமாட்டேனா?” என்றான்.

“போ வேண்டாம்மா..” வீட்டிற்கு வந்ததும், சாப்பிட வைத்து, மாத்திரைகள் கொடுத்துப் படுக்க வைத்தார் “கண்ணை மூடித் தூங்குமா... காலைல ஹொம் வொர்க் செய்யலாம்”

கொஞ்ச நேரம் கழித்து அவன் இருந்த அறைக்குச் சென்றபோது, தூங்காமல்  மேலேயே பார்த்துக் கொண்டு இருந்தான். அம்மாவைப் பார்த்ததும் “இங்கேயே இரும்மா...” என்றான். குரல் கெஞ்சியது.

”என்னம்மா..”

“பயம்மா இருக்கு...”

“என்னம்மா பயம்? அம்மா ஒங்கூடதான இருக்கேன்..” அவன் நெஞ்சைத் தட்டிக் கொடுத்தார். அப்படியே தூங்கிப் போனான்.

இரவில் திடுமென “என்னைத் தள்ளிராத.... தள்ளிராத.... கீழ விழுந்துருவேன்.. தள்ளிராத” என அரற்றினான்.

அப்பாவும், அம்மாவும் எழுந்து, விளக்கைப் போட்டு அவனைப் பார்த்தார்கள். கைகளால் எதையோ மறுப்பதாய் காற்றில் அசைத்துக் கொண்டு இருந்தான். காய்ச்சல் குறைந்து வியர்த்திருந்தான். “புள்ள எதுக்கோ ரொம்ப பயந்து போயிருக்கான்” என்றார் அம்மா. இதமாக அவனைத் தட்டிக் கொடுத்தார் அப்பா.

காலையில் எழுந்ததும், அம்மாவிடம் போய்,  “அம்மா... நா இன்னிக்கு ஸ்கூல் போக வேண்டாம்ல...”

“காச்சல்தான் விட்டுட்டே... போயிரலாம் கண்ணா!”

“நா போகலம்மா...”

“ஏம்ப்பா.. ஒனக்கு ஒன்னும் இல்ல இப்ப...”

“இல்லம்மா... நா இனும ஸ்கூலுக்கே போக மாட்டேன்..” அழுகை வரும் போலிருந்தான்.

“ஏம்மா.... ஸ்கூலுக்கு போகலன்னா எல்லோரும் பேட் பாய்னு சொல்வாங்க...”

“ஸ்கூலுக்கு போனா பேட் பாய்னு சொல்வாங்கம்மா..”

“ஏம்மா...”

“..............”

“எதுக்கும்மா... யாராவது எதாவது சொன்னாங்களாம்மா...”

“இந்த சோபியாதான் பயமுறுத்துறாம்மா...”

“என்னம்மா... எதுக்கும்மா பயமுறுத்துறாம்மா”

“...............”

“சொல்லும்மா..” ஆதரவாய் அவன் தலையைக் கோதி விட்டார்.

“சொன்னா அடிக்க மாட்டியே...”

“நா எதுக்கும்மா ஒன்ன அடிக்கனும். நீ தங்கப் புள்ளைல்ல...”

“அது வந்து... வந்து.... நாஞ்சொன்ன கெட்ட வார்த்தைய மிஸ்கிட்ட சொல்லிருவாளாம்”

“நீ என்னம்மா கெட்ட வார்த்தை சொன்ன....”

“ம்... ம்... அடிக்ககூடாது... பிராமிஸா..”

“ச்சீ... அடிக்க மாட்டேம்மா...”

“நா... சோபியாக்கிட்ட... சோபியாக்கிட்ட... ஐ லவ் யூன்னு சொன்னேம்மா...” வார்த்தைகள் முடிவதற்குள் குரலெல்லாம் உடைந்து அப்படியேத் தேம்பி அழ ஆரம்பித்தான்.

அவனையேப் பார்த்துக் கொண்டு இருந்த அம்மா “இதுக்கா போட்டு இப்படி அழற...” என்று வாரி அணைத்துக் கொண்டார். உடலெல்லாம் அதிர்ந்தது. மூச்சு புஸ் புஸ்ஸென்றது அவனுக்கு.

“தப்புத்தானம்மா... நாஞ் சொன்னது?”

“ம்... இல்லடா...”

“பொய் சொல்ற.... தப்புத்தான்... அப்பாக்கிட்டச் சொல்லாதம்மா..”

“சொல்லலை...”

“மிஸ்கிட்ட வந்து அடிக்கக் கூடாதுன்னு சொல்றியாம்மா...”

“சரிம்மா...”

“சோபியாக்கிட்ட பயமுறுத்தக் கூடாதுன்னு சொல்வியாம்மா?”

“சரிம்மா....”

“இனும அப்படி கெட்ட வார்த்தையெல்லாம் நான் சொல்லக் கூடாது என்னம்மா..”

“ஆமாம். எங்கண்னா..”

அம்மா அவனுக்கு முத்தம் கொடுத்தார். அவன் அம்மாவுக்கு முத்தம் கொடுத்தான். கீழிறங்கி புத்தகங்களை எடுத்து ஹொம் வொர்க் செய்ய ஆரம்பித்தான். குழந்தை சட்டென்று உற்சாகமாகிப் போனான்.

 

*

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஐயோ, அருமை, மழலை மொழி, அம்மாவின் பிரிய மொழி எல்லாம் அருமை, அந்த கெட்ட வார்த்தையை நானும் சிறுவயதில் சொல்லியிருக்கிறேன், எனக்கு பழைய ஞாபகங்களையெல்லாம் கிளறி விட்டு விட்டது, இந்தக் கதை. ரொம்ப நல்ல அம்மா இந்தக் கதையிலிருப்பவர், மனசு முழுக்கவும் நெறஞ்சி இருக்காங்க அந்த அம்மா. அம்மா என்ற உடனேயே சினிமாவில் உதிரிப்பூக்கள் அம்மா தான் நினைவு வருவார்.

    பதிலளிநீக்கு
  2. சிறுவர் உரையாடல்கள் உங்களுக்கு வெகு லாவகமாக வருகிறது!!! இதைமாதிரி எழுத சிறுவராகவே மாறவேண்டும்...

    பதிலளிநீக்கு
  3. அஞ்சலி படம் பார்த்த ஞாபகமெல்லாம் வருகிறது.. இந்த வயசில் ஓரக்கண்ணில் பார்த்த பாப்பா இப்ப எங்க இருக்குன்னே தெரியலை!

    //அம்மா என்ற உடனேயே சினிமாவில் உதிரிப்பூக்கள் அம்மா தான் நினைவு வருவார்.//
    ம்.

    பதிலளிநீக்கு
  4. சிறுவர்கள் கதைன்னா ரொம்ப அழகா பிரமாதப் படுத்திடுறீங்க. உரையாடல் ரொம்ப அருமையா அமைத்து இருக்கீங்க. நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. ”அவள்” என்றே பொதுவாகக் குறிப்பிடப்படும் அம்மாவுக்கும் அப்பாக்களுக்கு இயல்பாய்க் கொடுக்கும்
    ”ர்” மரியாதையை அறிமுகம் செய்ததற்குச் சிறப்பு வாழ்த்துக்கள்.

    அப்புறம் கதை.... :-)))))))))

    பதிலளிநீக்கு
  6. மிக அருமை! கண்முன் நடப்பதை பார்ப்பதுபோல! என்னோட சின்னவயசு நினைவு ஒன்னு எழுதி இருக்கேன்..நேரம் இருக்கும்போது பாருங்க..http://sandanamullai.blogspot.com/2006/07/blog-post_24.html..கொஞ்சம் இதுபோலதான்!

    பதிலளிநீக்கு
  7. யாத்ரா!
    ம்... எனக்கும் உதிரிப்ப்பூக்கள் அம்மா ரொம்ப பிடிக்கும். ‘அழகிய கண்ணே..’ என்ற பாடல் கேட்கும்போதெல்லா சோபை மிகுந்த அந்த முகம் நிழலாடும். பகிர்வுக்கு நன்றி.


    ஆதவா!
    ம்.... மிக்க நன்றி.


    சதீஷ்கண்ணன்!
    குழந்தையாயிருந்த அனுபவம் எல்லோருக்கும் உண்டே!



    வெங்கிராஜா!
    எதோ உள்ளுக்குள் இருக்கும் நினைவுகளை இந்தப் பதிவு கிளறி விட்டிருக்கும் போல.

    பதிலளிநீக்கு
  8. ஆ.முத்துராமலிங்கம்!
    ரொம்ப நன்றி.


    தீபா!
    ஆஹா.... மிகச் சரியாகச் சொல்லி விட்டாயே! நான் மெனக்கெட்டு செய்த முயற்சி அது.


    அத்திரி!
    நன்றி.

    குப்பன் யாஹூ!
    நன்றி.


    மங்களூர் சிவா!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. சந்தனமுல்லை!
    பகிர்வுக்கு நன்றி. நிச்சயம் அந்தப் அப்பதிவைப் படித்து விடுகிறேன்.


    ராஜ்!
    ரொம்ப நன்றி.

    அமிர்தவர்ஷிணி அம்மா!
    நன்றிங்க..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!