அம்மாவின் பாட்டும், சிரிக்கும் எனது எழுத்துக்களும்!

மேடையில் ஐந்தாறு பேர் போல இருக்கிறார்கள். நடுவில் கனகம்பீரமாக எல்லோரையும் பார்த்தபடி மணிவிழா நாயகர் . ஒரு அரசியல்வாதியாகவோ,
இலக்கியவாதியாகவோ, தொழில் அதிபராகவோ வைத்துக் கொள்ளுங்கள். தனது அறுபது வருடங்களில் பூவுலகில் அவர் செய்த மகத்தான காரியங்களுக்காக கௌரவப்படுத்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாலைகளும், பொன்னாடைகளும் வாழ்த்துக்களாய் குவிந்திருந்தன. சொந்தக்காரர்கள், நண்பர்கள், அபிமானிகள் என்று நிறையபேர் அந்த மண்டபத்தில் கூடி இருந்தார்கள்.


ஒருவர் பின் ஒருவராக அவரது குணநலன்களை, இரக்க சுபாவத்தை, தாராள மனதை தங்கள் நினைவுகளிலிருந்து எடுத்து வந்து ஒலியில் பெருக்கி
கொண்டிருந்தனர். மணிவிழா நாயகர் சிலநேரம் லேசாய் சிரிப்பார். சிலநேரம் தீவிர யோசனையில் இருப்பார். தான் என்னவெல்லாம் பேசுவது என்ற சிந்தனையில் அவர் அப்போது மூழ்கியிருக்க வேண்டும். கொஞ்சநேரம் அருகில் உட்கார்ந்திருந்த அவரது வாழ்க்கைத் துணைவியார் பிறகு மேடையில் இல்லை. வந்திருந்தவர்களை வரவேற்க, உபசரிக்க என பல வேலைகள் அந்த அம்மாவிற்கு இருந்தன. போகிற போக்கில் இரண்டு பேர் அந்த அம்மாவைப் பற்றியும் பேசினார்கள். 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்' என்ற மிக வழக்கமான வார்த்தைகளோடு சொல்லிக் கொண்டனர். முக்கியமான அந்தக் கட்டத்தில் அந்த அம்மாவை காமிராவில் பிடித்துவிட வீடியோ கிராபர் தேடியபோது , தொலைவில், கூட்டத்தின் பின்னால் அழுது கொண்டிருந்த ஒரு குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.


மணிவிழா நாயகர் அந்த அம்மாவைப் பார்த்து மேடையில் இருந்தபடியே தனது அருகே வந்து அமரும்படி சைகை காட்ட கூட்டம் லேசாய் சிரித்து சலசலத்தது. கொஞ்சம் வெட்கப்பட்டு மெல்ல வந்தார்கள். எல்லோரும் தன்னை வானளாவ புகழும்போது அதைக் கவனியாமல் இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று ஒரு கோபம் உள்ளுக்குள் அவருக்கு ஓடியது போலத் தோன்றியது. இப்போதாவது தன்னை இவள் முழுமையாக புரிந்து கொள்ளட்டும் என்று நினைத்திருக்கலாம். அந்த அம்மாவுக்குள் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
இந்தக் காட்சிகளை பார்த்துவிட்டு வந்த பிறகு ஒன்று தோன்றியது. இந்த மணிவிழாக்களெல்லாம் ஆண்களை மையமாக வைத்து மட்டுமே கொண்டாடப்படுகின்றன. பெண்களின் அறுபது வயது என்பது முக்கியமற்றதா? வாழ்வில் அவர்களுக்கு பங்களிப்பு இல்லையா? அவர்களையும் இப்படி கௌரவப்படுத்தலாமே. பக்கத்தில் அவர்களது வெற்றிக்குக் காரணமானவர்கள் என்று இந்த புருஷர்களை உட்கார வைக்கலாமே. இந்தச் சமூகம் யாரைப் பிரதானப்படுத்தி இயங்குகிறது என்பதை இந்த இடத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. பெண்ணுக்கு இங்கு இடமுமில்லை. பெண் ஒரு பொருட்டுமில்லை. ஆண்களுக்காகவே படைக்கப்பட்டவர்களாக நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள். சொந்தக் கால்களில் நிற்க அவர்களுக்கு அனுமதி இல்லை.
ஒருபுறம் அன்புக்கும், பொறுமைக்கும் அவர்களை இலக்கணமாக்கிவிட்டு இன்னொருபுறம் பலவீனமானவளாகவும், சுயபுத்தியற்றவளாகவுமே பெண்கள் இந்த சமூகத்தால் கற்பிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முரண்பாட்டில்தான் பெண்களுக்கான சிறைகள் அரூபங்களாய் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. கழுத்தில் கயிறு கட்டப்பட்ட நாயின், மாட்டின் தலையை வருடிக் கொடுக்கிற சமூகம் இது.


பெண்களை வெறும் உடலை வைத்து அளக்கப் பழகிய ஆண்மக்கள் இன்னமும் அவர்களின் உலகத்துக்குள் நுழையாமலேயே இருக்கிறார்கள். அவர்களின் பெரிய பெரிய பிரச்சினைகளைக் கூட புரிந்து கொள்ள வேண்டாம். சின்னச் சின்ன தவிப்புகளைஆண்கள் அறிந்திருக்கிறோமா என்று தெரியவில்லை. அவசரத்தில் அவ்வளவு சுறுசுறுப்பான மவுண்ட் ரோட்டில் சட்டென்று ஒதுங்கி சிறுநீர் கழிக்கும் ஆண்களுக்கு அவை புரிந்திருக்க வாய்ப்பில்லை.


பெண்களின் இதயத்தை காலம் காலமாக இந்த ஆண்கள் ஏமாற்றி ஏமாற்றித்தான் தொட முயல்கிறார்கள். காதலாயிருந்தாலும், கல்யாணமாயிருந்தாலும் பெண்கள் மிக விரைவில் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று புரிந்து கொள்கிறார்கள். தனக்குள் நிறைந்திருக்கும் பூக்களை, பறவைகளை, புல்வெளிகளை அறியமுடியாத தன் ராஜாவை நினைத்து சிரிக்கவா, அழவா என்று தெரியாமல் காலத்தை எதிர்கொள்கிறார்கள். ராஜாக்கள் தலை நிமிர்ந்து ஊர்பூராவும் நடந்து கொண்டு இருக்க, பெண்கள் எல்லாவற்றையும் புதைத்துக் கொண்டு சிரிக்க, பேச, சமைக்க என்று வாழுகிறார்கள். குழந்தைகள்தான் அவர்களுக்கு கிடைத்த ஆறுதல்.


அம்மாவின் பாட்டில் உள்ள சோகம் இருபது வயதுக்கு மேல்தான் எனக்குத் தெரிந்தது. அம்மா நன்றாகப் பாடுவார்கள். பாட்டு வாத்தியாரை வைத்து சின்ன வயதில் படித்திருக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயமாக சொல்லப்பட்டு இருந்தாலும் அழுத்தமாக மனதில் பதிந்திருக்கவில்லை. எப்போதும் பாட்டு பாடிக்கொண்டு இருப்பார்கள். துணி துவைக்கும் போதும் பாட்டு. சமைக்கும் போது பாட்டு. கோலம் போடும்போது பாட்டு. 'கிருஷ்ணா முகுந்தா முராரே... ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே' , 'கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சாய்..ஜெகமெங்கிலும்' என்று பாட்டுக்கள் வீட்டில் நிறைந்திருக்கும். அப்படி ஒரு ராகம் சுற்றி இருக்கிற பிரக்ஞை அற்று காலம் ஓடியிருந்திருக்கிறது என்பது இப்போது புரிகிறது. வேலையில் சேர்ந்து அம்மாவை விட்டுப் பிரிந்து தூரத்தில் போன பிறகு ஒருதடவை லீவில் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஒரு மத்தியான நேரம். திடுமென எனக்குத் தோன்றியது. அம்மா அருகில் போய் உட்கார்ந்து 'அம்மா ஒரு பாட்டு பாடுங்க' என்றேன். அம்மா ஆச்சரியமாய் என்னை பார்த்தார்கள். 'என்னம்மா ஒரு பாட்டு பாடுங்க... தானா எவ்வளவு பாட்டு பாடுவீங்க.. இப்போ பாடுங்க. கேட்டு ரொம்ப நாளாச்சு" என்றேன். பார்த்துக் கொண்டிருந்த அம்மா பொல பொலவென அழுதார்கள். பிரிவினால் அம்மாவின் மீது எனக்குள்ள ஏக்கத்தை புரிந்து கொண்டிருக்க வேண்டும் என நினைத்து அவர்களை "என்னம்மா இது" என தேற்றினேன். அம்மா என் தலையை வருடிக் கொண்டே "ஒங்க அப்பா ஒரு நாளு கூட இப்படிக் கேட்டதில்ல " என்று அழுதார்கள். நான் உறைந்து போனேன். அம்மாவுக்குள் இன்னும் எத்தனை பாட்டுக்கள் ஒளிந்திருந்திருக்குமோ.


அம்மாக்களின் சோகம் காலம் காலமாய் வீடுகளுக்குள் அடர்த்தியான மௌனமாய் நிறைந்து கிடக்கிறது. பாவப்பட்ட ஜென்மமாய், எதையோ இழந்து போனவர்களாய் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள். அடையாளம் மறுக்கப்பட்ட இந்த உயிர்களின் வேதனையை இங்கு யாரும் உணர்வதேயில்லை. எல்லாம் மிக இயல்பான ஒன்றாய் ஏற்றுக் கொண்டு வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. பெண்கள் தங்கள் குழந்தைகளிடம் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளும் அவர்களை ஏமாற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் அம்மாவின் குழந்தைகளாய் அவர்கள் இருக்கவில்லை. சமூகத்தின் குழந்தைகளாகவே இருக்கின்றனர். ஆண். பெண். அவ்வளவுதான்.


எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுடன் பேசிக் கொண்டு இருக்கும்போது ஒருமுறை குறிப்பிட்டார். "மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் இந்த சமூகம் அறிவு பூர்வமாகவோ, உணர்வு பூர்வமாகவோ புரிந்து வைத்திருக்கிறது. வர்க்க முரண்பாடுகள், தலித் அடக்குமுறைகள் எல்லாம் கூட ஒரு காலக் கட்டத்தில் தீர்ந்துவிடும். ஆனால் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளும், ஆதிக்கமும் குறைந்து போக பல நூற்றாண்டுகள் ஆகும் போல இருக்கிறது. பிரக்ஞை பூர்வமாக அதை இன்னும் வாய்கிழிய முற்போக்கு பேசுகிறவர்களும்கூட அறியவில்லை. "


இதை எழுதிக் கொண்டு இருக்கும் போதே பாத்ரூமிலிருந்து பையன் சத்தம் போட்டது கேட்டது. நானும் தொடர்ந்து குரல் எழுப்பினேன். "அம்மு... பாத்ரூமிலிருந்து நிகில் கூப்பிடுறான். போய்ப் பாரு " என்றேன்.
"என்னங்க ரன்னிங் கமெண்ட்ரியா கொடுக்கிறீங்க. நா சமையல்ல இருக்கேன்ல. நீங்க போய் அவன் காலக் கழுவி விடுங்களேன். நாந்தா அதச் செய்யணுமா?"
வீட்டில் அவள் மிகச் சாதாரணமாய், அமைதியான குரலில் இதைச் சொல்லிய போது அவமானமும், குற்ற உணர்வும் என்னை சட்டென்று தாக்கியிருந்தன. இது ஏன் தானாக எனக்கு உறைக்கவில்லை. இதை அவள்தான் செய்ய வேண்டும் என்ற நினைப்பு அணிச்சையாக படிந்திருக்கிறது. மௌனமாக பாத்ரூம் சென்று கால் கழுவி விட்டேன். இது போல ஒருநாளில் எத்தனை முறை அவளை எந்த சிந்தனையும் அற்று அழைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. இப்படித்தான் தாத்தா ஈஸிச்சேரில் உட்கார்ந்து கொண்டு ஒரு நாளைக்கு நூறு தடவை அழைத்துக் கொண்டிருப்பார். பாட்டியும் சளைக்காமல் வந்து கொண்டே இருப்பார்கள்.
பையன் என்னைப் பார்த்துச் சிரித்தான். திரும்பி வந்து எழுத உட்கார்ந்தேன்.

 

அதுவரை எழுதியிருந்த எழுத்துக்கள் இப்போது என்னைப் பார்த்துச் சிரித்தன.

 

(இது ஒரு மீள் பதிவு)

 

*

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மாதவராஜ் . மகிழ்ச்சியாய் இருக்கிறேன் .திருமணம் நடந்து முடிந்தது . அதான் :)

    பதிலளிநீக்கு
  2. ஒங்க அப்பா ஒரு நாளு கூட இப்படிக் கேட்டதில்ல " என்று அழுதார்கள். நான் உறைந்து போனேன். அம்மாவுக்குள் இன்னும் எத்தனை பாட்டுக்கள் ஒளிந்திருந்திருக்குமோ.
    //
    வீட்டில் அவள் மிகச் சாதாரணமாய், அமைதியான குரலில் இதைச் சொல்லிய போது அவமானமும், குற்ற உணர்வும்////

    மாதவராஜ் . எத்தனை நிதர்சனமானது . மிக அருமை

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் மாதவராஜ்

    மிக மிக அருமையான விடயங்கள்.

    \\சொந்தக் கால்களில் நிற்க அவர்களுக்கு அனுமதி இல்லை.\\

    ஆனா எனக்கு தெரிந்து பெரும்பாலான பெண்கள் சொந்த காலில் நிற்க விரும்புவதில்லை.

    \\பலவீனமானவளாகவும், சுயபுத்தியற்றவளாகவுமே பெண்கள் இந்த சமூகத்தால் கற்பிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முரண்பாட்டில்தான் பெண்களுக்கான சிறைகள் அரூபங்களாய் உருவாக்கப்பட்டு இருக்கின்றன\\

    ரோம்ப ரோம்ப சரி எடுத்துக்காட்டாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பார்க்க வேண்டாம் என நான் பல வலைப்பூக்களில் டிஸ்கி பார்த்துள்ளேன், அவை பெரும்பாலும் இலங்கை சார்ந்த விடயங்களாக இருக்கும்,

    வேற நிறைய எழுதத்தான் தோண்றுகின்றது

    ம்ம்ம் பிறிதொறு சமயம் பார்ப்போம்
    நன்றி
    இராஜராஜன்

    பதிலளிநீக்கு
  4. /*எல்லாம் மிக இயல்பான ஒன்றாய் ஏற்றுக் கொண்டு வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. பெண்கள் தங்கள் குழந்தைகளிடம் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளும் அவர்களை ஏமாற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் அம்மாவின் குழந்தைகளாய் அவர்கள் இருக்கவில்லை. சமூகத்தின் குழந்தைகளாகவே இருக்கின்றனர். ஆண். பெண். அவ்வளவுதான்.
    */
    :-((
    திரும்ப திரும்ப யாரேனும் எழுதுகிறார்கள். படித்துக் கொண்டு வாழ்க்கையோடு ஒப்பிட்டுவிட்டு மீண்டும் படிக்கிறேன். ம்... மாற்றங்கள் சின்ன சின்னதாகத் தென்பட்டாலும் , சில இடங்களில் கிடைத்தாலும் பலருக்கு எட்டாகனி.

    /*ஆனால் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளும், ஆதிக்கமும் குறைந்து போக பல நூற்றாண்டுகள் ஆகும் போல இருக்கிறது*/
    அப்படித்தான் தோன்றுகிறது... இங்கு தான் பெண்களைத் தவிர அனைவருக்கும் பெண்ணிலக்கணம் கூற உரிமை இருக்கிறதே!!!!

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான விஷயம். நண்பர் தமிழ்செல்வன் சொல்லியது போல பல நூற்றாண்டானாலும் மாறுமா இந்த நிலை என்பது கேள்விக்குறியே :((

    பதிலளிநீக்கு
  6. ஹ்ம்ம்..பெண்களுக்கான எல்லா அளவீடுகளும் ஆண்களால்தானே நிர்மாணிக்கப் படுகிறது!

    //பெண்ணுக்கு இங்கு இடமுமில்லை. பெண் ஒரு பொருட்டுமில்லை. ஆண்களுக்காகவே படைக்கப்பட்டவர்களாக நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள். சொந்தக் கால்களில் நிற்க அவர்களுக்கு அனுமதி இல்லை.
    ஒருபுறம் அன்புக்கும், பொறுமைக்கும் அவர்களை இலக்கணமாக்கிவிட்டு இன்னொருபுறம் பலவீனமானவளாகவும், சுயபுத்தியற்றவளாகவுமே பெண்கள் இந்த சமூகத்தால் கற்பிக்கப்பட்டு
    வருகிறார்கள்.//

    இதுதான் உண்மை நிலைமை!

    ஆனால் மாற்றங்கள் விரைவில் வருவதும் அம்மாக்கள் கையில்தான் இருக்கிறது என நம்புகிறேன்!

    பதிலளிநீக்கு
  7. //ஒங்க அப்பா ஒரு நாளு கூட இப்படிக் கேட்டதில்ல " என்று அழுதார்கள். நான் உறைந்து போனேன். அம்மாவுக்குள் இன்னும் எத்தனை பாட்டுக்கள் ஒளிந்திருந்திருக்குமோ//

    இவை எல்லாம் மாறி ரொம்ப காலம் ஆச்சி மாதவராஜ், எப்படி கண்மூடி தனமாய் பெண்கள் மட்டுமே இப்படி கஷ்ட படுவதாய் நம்புகிறீர்கள், ஆணோ பெண்ணோ அழகான மனம் படைத்த ஒருவர் அதை பற்றியே யோசிக்காத வரிடம் காலமெல்லாம் கஷ்ட பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள், நான் பார்த்து எத்தனையோ ஆண்கள் இப்படி, சுய நலம் ஆண்களுக்கு மட்டுமே உரிமை இல்லை,
    எதையும் கண்மூடி தனமாய் ஆதரிக்க எப்படி முடிகிறது ?

    யோசியுங்கள் மாதவ்

    - சுரேஷ் துரைராஜன்

    பதிலளிநீக்கு
  8. மிக அழுத்தமான எழுத்து,
    நிறைய இடங்கள் சட்டென்று கலவரப்படுத்தியது, இப்படிதான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

    |ஒருபுறம் அன்புக்கும், பொறுமைக்கும் அவர்களை இலக்கணமாக்கிவிட்டு இன்னொருபுறம் பலவீனமானவளாகவும், சுயபுத்தியற்றவளாகவுமே பெண்கள் இந்த சமூகத்தால் கற்பிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முரண்பாட்டில்தான் பெண்களுக்கான சிறைகள் அரூபங்களாய் உருவாக்கப்பட்டு இருக்கின்றன|

    இது தானே உண்மை.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா8 மே, 2009 அன்று PM 10:36

    //(இது ஒரு மீள் பதிவு)//

    ரொம்ப தான் நேர்மை உங்களுக்கு

    பதிலளிநீக்கு
  10. ////ஒங்க அப்பா ஒரு நாளு கூட இப்படிக் கேட்டதில்ல " என்று அழுதார்கள். நான் உறைந்து போனேன். அம்மாவுக்குள் இன்னும் எத்தனை பாட்டுக்கள் ஒளிந்திருந்திருக்குமோ//

    என்ன ஒரு நிதர்சனமான வார்த்தைகள்.. மாதவராஜ்..

    பதிலளிநீக்கு
  11. ரொம்பவும் கவர்ந்தது உங்கள் பதிவு !!!!

    நீங்கள் எழுதிய எழுத்துக்கள் உண்மை என்றாலும் எல்லாம் ஏட்டளவில் தான்

    ..//பெண்ணுக்கு இங்கு இடமுமில்லை. பெண் ஒரு பொருட்டுமில்லை. ஆண்களுக்காகவே படைக்கப்பட்டவர்களாக நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள். சொந்தக் கால்களில் நிற்க அவர்களுக்கு அனுமதி இல்லை.
    ஒருபுறம் அன்புக்கும், பொறுமைக்கும் அவர்களை இலக்கணமாக்கிவிட்டு இன்னொருபுறம் பலவீனமானவளாகவும், சுயபுத்தியற்றவளாகவுமே பெண்கள் இந்த சமூகத்தால் கற்பிக்கப்பட்டு
    வருகிறார்கள்.//

    எவ்வளவு ஆழமான அழுத்தமான வரிகள் .

    \\சொந்தக் கால்களில் நிற்க அவர்களுக்கு அனுமதி இல்லை.\\

    பதிலளிநீக்கு
  12. //அம்மாவின் குழந்தைகளாய் அவர்கள் இருக்கவில்லை. சமூகத்தின் குழந்தைகளாகவே இருக்கின்றனர்//

    சத்தியமான வார்த்தைகள்....

    மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்..

    பதிலளிநீக்கு
  13. ஆண் வேலை பெண்வேலைன்னு சமூகம் பிரிச்சுவச்சுக் கனகாலம் ஆகியாச்சு. அது அப்படியே இயல்பா ஆண்கள் மனசுலே படிஞ்சு போச்சு ஒரு ஃபாஸில் மாதிரி. அது கரையாது.

    முக்கியமா நம் இந்திய சமூகத்தில்இதைக் கரைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

    வீட்டில் ஆண்பிள்ளைத் துடைப்பத்தைத் தொட்டால் 'லட்சுமி' போயிருவாளாம், அந்த ஆண் தெருக்கூட்டும் வேலையில் சம்பாதிப்பவனாக இருந்தாலுமே!!!

    அருமையான பதிவு.

    இன்று அன்னையர் தினமாம். இனிய வாழ்த்து(க்)கள்.

    பதிலளிநீக்கு
  14. ஜீவா!
    வாழ்வின் இன்னொரு பரிமாணத்தை அறிந்து கொண்டிருக்கும் தங்களுக்கு வலைப்பதிவர் சார்பில் என் வாழ்த்துக்கள்.
    வருகைக்கு, பகிர்வுக்கும் நன்றி.

    ராஜராஜன்!
    //ஆனா எனக்கு தெரிந்து பெரும்பாலான பெண்கள் சொந்த காலில் நிற்க விரும்புவதில்லை.//
    அனுமதித்துப் பார்த்தால் அவர்களுக்கு அந்த அருமைத் தெரியும் என நினைக்கிறேன்.

    அமுதா!
    //இங்கு தான் பெண்களைத் தவிர அனைவருக்கும் பெண்ணிலக்கணம் கூற உரிமை இருக்கிறதே!!!!//
    பெண்களுக்கு இது குறித்து பிரக்ஞ்சை வரவேண்டும். அதுவரைக்கும் யாராவது எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தாக வேண்டும்தானே!

    மங்களூர் சிவா!
    நன்றி. தொடரும் முயற்சியால் எதுவும் சாத்தியமாகுமே!

    சந்தனமுல்லை!
    நிச்சயமாக!
    அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    சுரேஷ் துரைராஜன்!
    ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதத் தன்மையில், பெண்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லைதான்...
    ஆனால், பெண்களுக்கு எதுவும் தெரியாது என்பது ஆண்களின், குறிப்பாக கணவன்மார்களின் மனதில் உறைந்திருக்கிறது.

    ஆ.முத்துராமலிங்கம்!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    அனானி!
    நன்றி.

    மலர்!
    தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி.

    தீப்பெட்டி!
    மிக்க நன்றி.

    துளசி ராஜகோபால்!
    ஆஹா! வாங்க... வாங்க..!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
    அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. மாதவராஜ்,

    //துளசி ராஜகோபால்!//


    இந்த 'ராஜ' உபசாரம் வேணாங்க. அவர் யாரோ!!!!

    வெறும் கோபால் போதுங்க:-))))

    என்றும் அன்புடன்,
    துளசி கோபால்.

    பதிலளிநீக்கு
  16. அன்பின் மாதவராஜ்

    துளசி கூறியது தான் உண்மை நிலை. சில செயல்கள் ஆண்கள் செய்ய வேண்டும் - சில செயல்கள் பெண்கள் செய்ய வேண்டும் என்பது நம் இரத்தத்தில் ஊறி விட்டது.

    தற்போதைய சூழ்நிலையில், இருவரும் பணிக்குச் செல்லும் சூழ் நிலையிலும் இவ்வெண்ணங்கள் மாற வில்லைஇ. அதற்கு ஆணாதிக்கம் காரணமல்ல - பழகிய பழக்கம் தான் காரணம். பெண்கள் பெருமையாகவே எடுத்துக் கொள்கிறார்கள் பணிகளைச் செம்மையாகச் செய்வதனை.

    ஆனால் நாம் தான் பெண்களை நட்பாக - தோழியராக நடத்துவதே இல்லை. அலுவலகத்தில் பெண்களோடு அரட்டை அடிப்பதும் - உதவி செய்வதும் - பாராட்டுவதும் - கவலைகளாஇப் பகிர்ந்து கொள்வதும் செயல் படுத்தும் நாம் ஏன் வீட்டிலும் இவ்வுணர்வுகளைக் காட்டுவதில்லை.

    காலம் மாற வேண்டும் - மாறுகிறது - மாறும்

    நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!