அப்பாவிகளாய் இருப்பது எத்தனை ஆபத்தானது!

sonia and advani

ஒருதடவை உயர்ந்த புல்வெளிப் பிரதேசத்தில் செம்மறியாடும், அதன் குட்டியும் மேய்ந்து கொண்டிருந்தன. பசியோடு வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த கழுகு அந்த செம்மறியாட்டுக் குட்டியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. இரையை தூக்கிச் செல்ல மெல்ல கீழிறங்கி தாழப் பறந்தது. அப்போது அதே எண்ணத்தில் இன்னொரு கழுகும் வட்டமிட ஆரம்பித்தது. இரண்டு கழுகுகளும் பகை கொண்டு ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டன. வான்வெளியில் அதன் மூர்க்கமான சத்தங்கள் பரவின.

செம்மறியாடு அண்ணாந்து பார்த்தது. தன் குட்டியைப் பார்த்து சொன்னது: “இந்த விசித்திரத்தைப் பார்த்தாயா? இந்த இரண்டு பெரிய பறவைகளும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இவ்வளவு பெரிய வானம் இவைகள் பறக்கப் போதுமானதாக இல்லையா? என் அருமைக் குழந்தையே, பிரார்த்தனை செய், இந்த பறவைகளிடத்து அமைதி திரும்ப பிரார்த்தனை செய்”

குட்டியும் அது போன்றே, இதயபூர்வமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டது.

கலில் கிப்ரானின் இந்தக் கதை மிக உயர்ந்த இடத்திலிருந்து கேட்கிறது. சகல இடத்திலும் அன்பையும், அமைதியையும் விரும்புகிற எளியவர்களின் ஆன்மாவிலிருந்து எழுந்த பாடல் போலவும் ஒலிக்கிறது. பகைவனுக்கும் அருள்வாய் நன்னேஞ்சே என்னும் பாரதியின் குரலையும் அடையாளம் காண முடிகிறது.

ஆனால், வஞ்சகமும், சூழ்ச்சியும், வேட்டை வெறியும் கொண்டவர்களிடம் இந்த மொழியால் உரையாட முடியுமா எனத் தெரியவில்லை. இதோ காங்கிரஸும், பிஜே.பியும் சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றன. மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.அப்பாவிகளாய் இருப்பது எத்தனை ஆபத்தானது!

 

*

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அப்பாவிகளாய் இருப்பது ஆபத்தானது!

    ஆட்டுக்குட்டிகள் புரிந்துகொள்ளாதவரை...

    பதிலளிநீக்கு
  2. //அப்பாவிகளாய் இருப்பது எத்தனை ஆபத்தானது!//

    ரொம்ப கஷ்டம் தான்!
    அதுவும் அந்த அப்பாவிகள் பலியாடுகள் ஆகும் போது இன்னும் கஷ்டம்!

    பதிலளிநீக்கு
  3. |கலில் கிப்ரானின் இந்தக் கதை மிக உயர்ந்த இடத்திலிருந்து கேட்கிறது.|

    சூழ்நிலைக்கு தகுந்ததாக பதிவிட்டு
    எல்லோருக்கும் கேட்கும்படி... செய்து விட்டீர்கள். குட்டி குட்டி கருத்துள்ள கதைகள் நல்லதாகவே இருக்கின்றன.

    //அப்பாவிகளாய் இருப்பது எத்தனை ஆபத்தானது!//
    புரிகின்றது!!

    பதிலளிநீக்கு
  4. திலிப் நாராயணன்5 மே, 2009 அன்று PM 11:41

    'ஆடுகள் மட்டுமே பலியிடப்படுகின்றன சிங்கங்கள் அல்ல' என்ற அண்ணலின் கூற்று இந்தப்பதிவில் வெளிப்படுகிறது

    பதிலளிநீக்கு
  5. கலீல் ஜிப்ரான் கதை அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. சந்தர்ப்பவாதிகளான இடது - வலது கம்யூனிஸ்ட் பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லை ஏன்?

    பதிலளிநீக்கு
  7. நல்ல வேலை சோனியா செருப்புகளிடம் இருந்து தப்பித்து விட்டார்!!!!!

    ஆனால்.....

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா6 மே, 2009 அன்று PM 4:10

    கலீல்ஜிப்ரானின் கவிதையை மிக மிக அழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள். அது மட்டுமல்ல. கழுகுகளையும், ஆட்டையும் அழகாக உருவகம் செய்துள்ளீர்கள்.சபாஷ்.

    பதிலளிநீக்கு
  9. த.ஜீவராஜ்!
    எப்படியிருக்கீங்க. புரிந்துகொண்டு விட்டால் அப்பாவிகள் இல்லையே!

    வால்பையன்!
    வருமைக்கு நன்றி. அப்பாவிகள் பலியாகத்தானேச் செய்யும்.

    ஆ.முத்துராமலிங்கம்!
    சில கதைகள் வாழ்வின் முக்கியச் சூழல்களுக்கு எப்போதும் பொருந்தி விடுகின்றன, இல்லையா?

    சரவணகுமரன்!
    வாங்க. தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    திலிப் நாராயணன்!
    வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்து உண்மைதான்.

    யாத்ரா!
    நன்றி.

    ஜான்பொன்ராஜ்!
    இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் சந்தர்ப்பவாதம் குறித்து ஏன் பேசுகிறீர்கள் என்பது புரியவில்லை. மேலும், கம்யூனிஸ்டுகள் சந்தர்ப்பவாதிகள் அல்ல என்பது என் கருத்து.

    அனானி!
    வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. மங்களூர் சிவா!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. கழுகுகளின் குணம் தெரிந்தும் - அவைகளுக்காகப் பிரார்த்திக்கும் ஆட்டுக்கூட்டம் தான் நாம். என்ன செய்வது ? அப்பாவித்தனமே போதுமென்றிருக்கிரோம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!