முன்பக்கம் , � ஒரு மாவீரனின் கதை.

ஒரு மாவீரனின் கதை.

2759_angry_hen_biting_his_teeth ஆறு வருசத்துக்கு முன்னால் ஒரு சின்ன வாய்த்தகராறில் அவனது சித்தப்பாவின் காலை விறகுக்கட்டையால் அடித்து ஒடித்து விட்டான். ஊருக்குள் சிம்ம  சொப்பனமாக கர்ஜித்துக் கொண்டிருந்தவர் அவர். பண்டாரவிளை வைத்தியத்தில் குணமானாலும் இன்றும் லேசாக தெத்தி தெத்தித்தான் நடக்க முடிகிறது.  அப்புறம் தேரியில் முந்திரி மரம் ஏலம் எடுக்கும் தகராறில் சண்டியன் குருசாமியை மந்தையில் வைத்து அரிவாளால் சின்னதாய் தோள்பட்டையில் வெட்டி  விட்டான். இப்படித் தொடங்கிய அவனது பராக்கிரமங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நீண்டு போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு  ரெகார்டுகளில் பதிந்து பதிந்து ‘ரவுடிப்பய’ என்று பேரெடுத்தான்.

யாராவது தாக்கிவிடக் கூடும் என்று சதாநேரமும் சில வெட்டிப் பயல்களோடு திரியப் போய்  அவர்கள் அன்போடு “அண்ணே” என்றனர். அந்தக் கட்சியின் சார்பாக எம்.எல்.ஏவை வரவேற்க அடித்த போஸ்டரில் அச்சடித்திருந்த அம்பத்தாறு பேரில் இவன்  பேர் மாவீரன் சுடலைமுத்து என்று இருந்தது. ஊருக்குள் அதைப் பார்த்து முதலில் சிரிக்கத்தான் செய்தார்கள். கொஞ்சநாளில் நடந்த ஊர்த் திருவிழாவுக்கு  ‘மாவீரன் சுடலைமுத்து மோர்ப் பந்தல்’ என்று கொட்டகை போட்டு, தனது இருபத்தொன்பது வயதிலேயே மாவீரனாய் பேரெடுக்க ஆரம்பித்தான்.

எட்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்று ஒன்றிரண்டு பெரியவர்களைத் தவிர ஊருக்குள் யாரும் சுடலை முத்து என்று அவனை கூப்பிடுவது இல்லை.  கூப்பிடவும் முடியாது என்று வைத்துக் கொள்ளுங்களேன். மாவீரன் சுடலைமுத்துதான். அடர்ந்து முறுக்கிய மீசையும், செவ்வரி ஒடிய கண்களும், மடிப்புக்  கலையாத வெள்ளைச் சட்டையும், வேட்டியும் என ஆளே ஒரு தினுசாகி விட்டிருந்தான். ஊரில் எந்த விசேஷம் என்றாலும் அவனுக்கு பிரத்யேக மரியாதையும்,  அழைப்பும்.

இதுதான் சுடலைமுத்து, மாவீரனான வரலாறு.

சரி விஷயத்துக்கு வருவோம். சம்பவத்தன்று மாவீரன் காலையில் எழுந்ததும் லுங்கியோடு தோட்டத்துப் பக்கம் சென்றிருக்கிறான். நேற்றிரவு அடித்த  ஓ.சி.ஆரும், அது அடங்க நடு இரவில் களக், களக்கென குடித்த செம்புத் தண்ணீரும் முட்டிக்கொண்டு வந்திருக்கிறது. என்றுமில்லாமல் அந்த நேரம் பார்த்து   அங்கு முருங்கை இலை பறிக்க சக்திக்கனியக்காவும், கோமதியும் நின்றிருந்திருக்கிறார்கள். ஒதுக்குப்புறமாய் கொஞ்சம் தள்ளிப் போவோம் என்று படலையை  விலக்கி, பக்கத்தில் இருந்து முடுக்குப் பக்கம் சென்றிருக்கிறான். அங்கேதான் விதி தனது விளையாட்டை ஆரம்பித்தது. நமது பெட்டிக்கடை அருணாச்சலத்தின்  கோழி தனது குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருக்கிறது. தரையை தாய்க்கோழி கால்களால் கீறிக் கீறி விட, குஞ்சுகள் அந்த இடத்தில் பாய்ந்து பாய்ந்து கொத்திக்  கொண்டிருந்தன.

மாவீரன் வாகாக லுங்கியை உயர்த்தி மடித்துக் கட்டி, லேசாய் செருமிக் கொண்டு கம்பீரமாய் உட்கார்ந்திருக்கிறான். அவ்வளவுதான். அந்த தாய்க்கோழி என்ன  நினைத்ததோ தெரியவில்லை. இறக்கைகள் எல்லாம் சிலிர்த்து ஆவேசமாய் அவன் மீது பாய்ந்திருக்கிறது. எதிர்பாராத மாவீரன் “ஏ..அம்மா” என்று கத்தி நிலை  தடுமாறி சரிந்திருக்கிறான். விலகிப்போன கோழி திரும்பவும் ஆக்ரோஷமாய் அவன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. மாவீரன் எழுந்து, அவிழ்ந்த லுங்கியை  ஒரு கையில் பிடித்தபடி படலையத் தாண்டியிருக்கிறான். லுங்கி படலையில் சிக்கிக் கொண்டது. வேறு வழியில்லாமல் லுங்கியை அங்கேயே விட்டுவிட்டு  ஒடியிருக்கிறான். கொக் கொக்கென குரலோடு கோழியும் விடாமல் துரத்தியிருக்கிறது.

இசக்கியம்மன் கோவில் அருகே தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள், அவன் வந்த கோலத்தைக் கண்டு என்னமோ எதோ என்று அலறி மிரண்டு,  பின்னால் துரத்தி வந்த கோழியைப் பார்த்ததும் பெருங்கூச்சலாய் சிரிக்க ஆரம்பித்தார்கள். மாவீரன் ‘ச்சீ..’ என்று அவர்களைப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்து தன்  உயிருக்காக ஓடிக்கொண்டிருந்தான். வாய்க்காங்கரைமுத்து வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்த சொர்ணத்தாயம்மாள் “சின்ன வயசில் இப்படி  மணியாட்டிக்கொண்டு இவன் ஒடிப் பார்த்தது” என்று பொக்கை வாய் திறந்து சிரித்தார்கள்.

தன் வீட்டுச் சந்து வந்ததும் திரும்பிப் பார்த்தான். கோழியை காணோம். அவமானம் மொத்தமாய் பிடுங்கித் தின்றது. பக்கத்தில் கொடியில் காயப்போட்டிருந்த  யாருடைய சேலையையோ இழுத்துப் போர்த்திக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான். முதலில் பதறி, பிறகு சிரித்த அவளது மனைவியை ஓங்கி கன்னத்தில்  அறைந்து ஒரு ஒரமாய்ப் போய் உட்கார்ந்து கொண்டான். அதற்குள் தெரு, மந்தை, வயல்வெளி எல்லாம் தாண்டி தேரிக்காட்டிற்குள் விறகு பொறுக்கிக்  கொண்டிருந்த பெண்கள் வரை யாவரும் சிரித்துக் கிடந்தனர்.

மாவீரன் வெளியே தலை காட்டவில்லை. எங்கு பார்த்தாலும் சிரிப்புச் சத்தம் கேட்ட மாதிரியே இருந்தது. அவனது பரிவாரங்களும் தங்கள் அண்ணனைப் போய்ப்  பார்த்து துக்கம் விசாரிக்கத் தயங்கினார்கள். தப்பித் தவறி அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டால் என்ன செய்ய என்று யோசித்தார்கள். ரொம்ப  கஷ்டப்பட்டு முகத்தில் சோகத்தை வரவழைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் அவனருகில் உட்கார்ந்திருந்து வந்தார்கள். மாவீரன் குன்னிப் போய் தலை கவிழ்ந்து  உட்கார்ந்திருந்தான். நிமிரவேயில்லை. பள்ளிக்கூடமும் கிண்டல்களும் கேலிகளுமாய்க் கிடந்தது. மாவீரனின் குழந்தைகளுக்கு வெட்கமாய் இருந்தது. தங்கள்  தாயிடம் முணுமுணுத்துத் தள்ளினர்.

சில நாட்கள் கழித்து ஒருநாள் சுடலைமுத்து மந்தைக்கு போய்  ஒரு டீ குடித்து விட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அதைப் பற்றி யாரும்  பேசாவிட்டாலும், எல்லோரும் அதையேதான் சிந்தித்துக் கொண்டிருப்பதாய்ப் பட்டது. சிரித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிந்தது. அவனது எதிரிகளும் அவனை  பரிதாபம் கொண்டு பார்த்தனர். பொது நிகழ்வுகளில் முகம் காட்டாமல் வீடு, தோட்டம் என்று அடைந்து கிடந்தான். யாராவது மாவீரன் என்று அழைத்தால்  இப்பொதெல்லாம் கொலைவெறி வந்து அடக்கிக் கொண்டான்.

எதுவும் அறியாத அந்தக் கோழியோ, மாவீரனை வெறும் சுடலைமுத்துவாக்கிய் கதையை எழுதுவது போல  தரையில் அதுபாட்டுக்கு கிளறிக்கொண்டிருக்கிறது.

 

*

Related Posts with Thumbnails

38 உரையாடல்கள் இதுவரை. நீங்களும் தொடரலாம்! to "ஒரு மாவீரனின் கதை."

  1. Excellent...

    வி.வி. சிரித்தேன் :)

  2. //எதுவும் அறியாத அந்தக் கோழியோ, மாவீரனை வெறும் சுடலைமுத்துவாக்கிய் கதையை எழுதுவது போல தரையில் அதுபாட்டுக்கு கிளறிக்கொண்டிருக்கிறது//

    நல்ல கற்பனை...

  3. அருமை. பெரும்பாலும் உங்களின் சீரியஸ் பதிவுகளையே படித்த எனக்கு இது புதிய அனுபவம்

  4. \\அதைப் பற்றி யாரும் பேசாவிட்டாலும், எல்லோரும் அதையேதான் சிந்தித்துக் கொண்டிருப்பதாய்ப் பட்டது\\

    நானும் பலமுறை இதுபோல உணர்ந்திருக்கிறேன்

  5. Venmani says:
    This comment has been removed by the author.
  6. Venmani says:

    http://www.youtube.com/watch?v=B0DTpP68YFQ&feature=related

  7. Deepa J says:

    ஹைய்யோ! சான்ஸே இல்ல‌.
    சிரித்துச் சிரித்துத் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எழுப்பி விட்டேன்!

    Uncle, you are such a versatile writer. Proud of you!

  8. இப்போதெல்லாம் தெருவிற்கு நான்கு மாவீரர்கள் இருக்கிறார்கள் :)

  9. dear mathav

    Ithu enna puthu kalaattaa?
    reads like a Vadivelu comedy scene..fully thoroughly enjoyable!
    I was reminded of an old comedy by Chandrababu...The sequence goes like this -

    He just has a chance encounter with an established rowdy in the market. On his own, the rowdy falls down,but chandrababu rushes home back hurriedly fearing counter-attacks from the rowdy's gangsters. The 'disciples' (Sishya-kedikal)chase him to his small hut and when they enter in, Chandrababu jumps up and clings from the rooftop with full panic writ large on his face. But, the anti-climax of the scene unfolds, with the mini-rowdies falling at the feet of Chandrababu declaring him as their future dadha, for he has pushed down their leader. Chandrababu trembles to accept this 'temporary status' as he is fully aware of things to follow subsequently!

    a very fine parody. a good satire. a nice short story. vazhthukkal....

    s v venugopalan

  10. Subbu says:

    ஹைய்யோ!ஹைய்யோ! :)))))))))))))))))))

  11. MiniLorry says:

    மிகவும் அருமையான பதிவு!

  12. சிரித்து சிந்திக்கவைத்த பதிவு,

  13. Iyooo...after a long gap u made us to laugh.super sir !
    the Sornathammal comments is very natural..excellent that place.Old ammakkal will say so in rural villages.---good---selvapriyan

  14. அருமையான பதிவு,

    /// மாவீரனை வெறும் சுடலைமுத்துவாக்கிய் கதையை எழுதுவது போல தரையில் அதுபாட்டுக்கு கிளறிக்கொண்டிருக்கிறது///

    ம்.. இந்த நிமிடம் கூட ஏதோவொரு கோழி, உலகின் ஏதோவொரு மூலையில் ............கிளறிக்கொண்டிருக்கலாம் யார்கண்டது..

  15. அருமை!!! சிரிக்கவும் சிந்திக்கவும் ஒரு நல்ல கதை!!!! கதை இறுதி ஆக ஆக.... ஒரு நல்ல உணர்வைத் தருகிறது!!!

    நீங்கள் ரொம்ப நல்ல திறமையான கதாசிரியர்!!!

  16. subburam says:

    சுடலைமுத்து ரவுடியாகியது, பின்னர் மாவீரன் ஆனது, ஒரு கோழி மாவீரனை மறுபடியும் மனிதனாக்கியது. நல்ல கதை.நாடு முழுவதும் நிறையக் கோழிகள் தேவைப்படுகின்றன.மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  17. வெட்டிப்பயல்!

    முரளிக்கண்னன்!

    வெண்மணி!

    தீபா!

    சிரிச்சிங்களா...! மிக்க நன்றி...!

  18. சுந்தர்!

    தெருவில கோழி வளர்க்கிறாங்களா?

  19. வேணுகோபாலன்!
    சொல்லரசன்!
    விமலாவித்யா!

    அனைவருக்கும் நன்றி.

  20. சுப்பு!

    மினிலாரி!

    தங்கள் வருகைக்கும், முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  21. தங்கராஜ்!
    ஆதவா!
    சுப்புராம்!

    மிக்க நன்றி.

  22. இந்த கதை சுடலை முத்துவோடதா...இல்ல மாதவராஜோடதா...
    என்க்கு என்னமோ சந்தேகமாவே இருக்கு....!

  23. Really super
    3rd diymention thinking great.

    puduvai siva

  24. முகமது பாருக் says:

    ம்ம்ம்.. அருமையான பதிவு தோழரே.. சின்ன வயதில் படித்த நீதி கதைகளை போல உள்ளது.

    உண்மையில் சில மாதங்களுக்கு முன்னால் மதுரையிலும் இதேபோல ஒரு கோழி கிளறிவிட்டிருந்தது..

    தோழமையுடன்

    முகமது பாருக்

  25. டக்ளஸ்!

    உங்கள் கற்பனையைப் பொறுத்து, யாருக்கு வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம்.

  26. புதுவை சிவா!

    தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  27. முகமது பாருக்!
    //உண்மையில் சில மாதங்களுக்கு முன்னால் மதுரையிலும் இதேபோல ஒரு கோழி கிளறிவிட்டிருந்தது..//

    ஆஹா..! சிக்கலான இடத்துக்குச் செல்கிறீர்களே!

  28. அருமையான பதிவு

  29. கடையம் ஆனந்த்!

    வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  30. நல்ல நகைச்சுவையோடுள்ள பதிவு.
    /தாய்க்கோழி என்ன நினைத்ததோ தெரியவில்லை. /
    இதுபோல இன்னும் நிறைய.
    ஊரில்,பலபேர் இப்படித்தான் உருவாகி,திரிந்துகொண்டுள்ளனர்.இருந்தாலும், உங்களின் விவரணைகளே மாவீரன்? மேல் அனுதாபத்தை வரவைத்துவிடுகிறது.மனுஷ்யபுத்திரன் அவர்களின்”ஒரு அவமானத்திற்குப் பிறகு” கவிதை ஞாபகம் வந்து போனது./you are such a versatile writer. Proud of you!/
    வழிமொழிகிறேன்.

  31. முகமது பாருக் says:

    ha ha ha...!!உண்மைதாங்க!!

  32. முத்துவேல்!
    //மாவீரன்? மேல் அனுதாபத்தை வரவைத்துவிடுகிறது.//

    சரிதான். நுட்பமாக உணர முடிந்திருக்கிறது. நன்றி.

  33. முபாரக்!
    ஹா...ஹா...ஹா..ஆமாம் உண்மைதாங்க.

  34. haiyoo

    சிரிப்ப அடக்கமுடியல.

  35. Suresh says:

    Nalla :-) irunthuchu thalaivare

  36. அமிர்தவர்ஷினி அம்மா!

    தங்கள் வருகை மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. பகிர்வுக்கு நன்றி.

  37. சுரேஷ்!


    அதென்ன தலைவரே....
    பயம்மாயிருக்கே...
    வருகைக்குக்கும் பகிர்வுக்கும் நம்றி.

  38. மாவீரன் வாகாக லுங்கியை உயர்த்தி மடித்துக் கட்டி, லேசாய் செருமிக் கொண்டு கம்பீரமாய் உட்கார்ந்திருக்கிறான். அவ்வளவுதான். அந்த தாய்க்கோழி என்ன நினைத்ததோ தெரியவில்லை. இறக்கைகள் எல்லாம் சிலிர்த்து ஆவேசமாய் அவன் மீது பாய்ந்திருக்கிறது. எதிர்பாராத மாவீரன் “ஏ..அம்மா” என்று கத்தி நிலை தடுமாறி சரிந்திருக்கிறான். விலகிப்போன கோழி திரும்பவும் ஆக்ரோஷமாய் அவன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. மாவீரன் எழுந்து, அவிழ்ந்த லுங்கியை ஒரு கையில் பிடித்தபடி படலையத் தாண்டியிருக்கிறான். லுங்கி படலையில் சிக்கிக் கொண்டது. வேறு வழியில்லாமல் லுங்கியை அங்கேயே விட்டுவிட்டு ஒடியிருக்கிறான். கொக் கொக்கென குரலோடு கோழியும் விடாமல் துரத்தியிருக்கிறது.

    இசக்கியம்மன் கோவில் அருகே தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள், அவன் வந்த கோலத்தைக் கண்டு என்னமோ எதோ என்று அலறி மிரண்டு, பின்னால் துரத்தி வந்த கோழியைப் பார்த்ததும் பெருங்கூச்சலாய் சிரிக்க ஆரம்பித்தார்கள். மாவீரன் ‘ச்சீ..’ என்று அவர்களைப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்து தன் உயிருக்காக ஓடிக்கொண்டிருந்தான். வாய்க்காங்கரைமுத்து வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்த சொர்ணத்தாயம்மாள் “சின்ன வயசில் இப்படி மணியாட்டிக்கொண்டு இவன் ஒடிப் பார்த்தது” என்று பொக்கை வாய் திறந்து சிரித்தார்கள்.

    தன் வீட்டுச் சந்து வந்ததும் திரும்பிப் பார்த்தான். கோழியை காணோம். அவமானம் மொத்தமாய் பிடுங்கித் தின்றது. பக்கத்தில் கொடியில் காயப்போட்டிருந்த யாருடைய சேலையையோ இழுத்துப் போர்த்திக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான். முதலில் பதறி, பிறகு சிரித்த அவளது மனைவியை ஓங்கி கன்னத்தில் அறைந்து ஒரு ஒரமாய்ப் போய் உட்கார்ந்து கொண்டான். அதற்குள் தெரு, மந்தை, வயல்வெளி எல்லாம் தாண்டி தேரிக்காட்டிற்குள் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த பெண்கள் வரை யாவரும் சிரித்துக் கிடந்தனர்.

    மாவீரன் வெளியே தலை காட்டவில்லை. எங்கு பார்த்தாலும் சிரிப்புச் சத்தம் கேட்ட மாதிரியே இருந்தது. அவனது பரிவாரங்களும் தங்கள் அண்ணனைப் போய்ப் பார்த்து துக்கம் விசாரிக்கத் தயங்கினார்கள். தப்பித் தவறி அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டால் என்ன செய்ய என்று யோசித்தார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு முகத்தில் சோகத்தை வரவழைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் அவனருகில் உட்கார்ந்திருந்து வந்தார்கள். மாவீரன் குன்னிப் போய் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தான். நிமிரவேயில்லை. பள்ளிக்கூடமும் கிண்டல்களும் கேலிகளுமாய்க் கிடந்தது. மாவீரனின் குழந்தைகளுக்கு வெட்கமாய் இருந்தது. தங்கள் தாயிடம் முணுமுணுத்துத் தள்ளினர்.



    இரவு பணி செய்து கொண்டிருந்தபோது ..படித்த இந்த மாவீரனின் கதையால்
    ஒரு மணிநேரமாக சிரித்து...............கொண்டே இருந்தேன்
    அருமையான பதிவு
    அந்த மாவீரனின் முகத்தை காண ஆவலாக உள்ளது !!))))

Post a Comment