நான் கடவுள் அல்லது கங்கைக்கரை சுடலைமாடன்

Naan-kadavul ஒரே ஒரு ஊர்ல ஓரே ஒரு அப்பாவாம். அவருக்கு ஒரே ஒரு பையனாம். அவன் உங்களுடன் இருந்தால் தோஷம் என்று நான்கு ஜோதிடர்கள் ஒரே மாதிரி  சொல்கிறார்களாம். அப்பா தன் மகனை கங்கைக் கரையில் மந்திரம் படிக்க விட்டு விடுகிறாராம். பதினைந்து வருடங்கள் கழித்து மகனைப் பார்க்க, ம்களோடு  காசிக்கு வருகிறாராம். அங்கு பிணங்களை எரிக்கிற, தியானம் செய்கிற, மந்திரம் சொல்கிற, சுயம்புநிலைப் பித்தனாய் மகனைப் பார்க்கிறாராம். அவனை  வளர்த்த குருவின் சொல் கேட்டு, உறவுகளை முழுமையாய் அறுத்தெறியும் பொருட்டு, தேடி வந்த உறவுகளோடு ஊருக்கு மகன் புறப்படுகிறானாம்.

கருப்புப் போர்வை மாதிரியான உடையில், கபாலமணி மாலையணிந்து, கஞ்சா அடித்துக் கொண்டு, தாடி முடியோடு வெறித்த பார்வையோடும் அல்லது மூடிய  கண்களோடும் இருக்கிற மகனைப் பார்த்து அம்மா அதிர்ந்து போகிறார். நள்ளிரவில் உடுக்கை அடித்துக் கொண்டு புகை நடுவே காட்சியளிக்கும் அவனைப்  பார்த்து அண்டை வீட்டார் மிரண்டு நிற்கிறார்கள். இந்த இடத்தில் நிற்க.

உடல் வளர்ச்சி குன்றிப்போயிருக்கிற, உறுப்புகள் சிதைந்திருக்கிற, கைவிடப்பட்ட, வயதான, ஆண் பெண் பாலற்ற, இயல்பான தோற்றமற்ற என பல  ரூபங்களில்  அசாதாரண மனிதர்கள் வருகிறார்கள். அவர்களை கூட்டம் கூட்டமாய் சேகரித்து, அவர்களை பிச்சையெடுத்துப் பிழைக்க வைக்கிற கருப்பு  மொட்டைத் தலையன் ஒருவன் இருக்கிறான. பிச்சையெடுக்க வைக்க அவன் கையாளும் கொடூரத்தனங்கள் காண்பிக்கப்படுகின்றன.

நள்ளிரவில் துடியாக பித்தன் புறப்படுகிறானாம். மலைக் கோவிலுக்குச் செல்கிறானாம். அங்கு போய் குகை மாதிரியான இடத்தில் உட்கார்ந்து கொள்கிறானாம்.  இந்த இடத்திலும் நிற்க.

மலைக்கோவில் வாசலில் அவர்கள் பிச்சையெடுக்கிறார்கள். சிவன், பார்வதி, கிருஷ்ணர், அனுமன் என ரூபங்கள் புனைந்து இருக்கிறார்கள்.

ஆடிப்பாடிப் பிழைக்கும் கூட்டம் ஒன்று. அதில் கண்ணற்ற பாடகி ஒருத்தி இருக்கிறாள். போலீஸ் உதவியோடு ஒருவன் அவளை  பிச்சையெடுக்க வைக்க  தூக்கிச் செல்கிறான். அழுது கலங்கி நிற்கும் அவளுக்கு, வந்து சேர்ந்த இடத்தில் இருக்கும் மற்றவர்கள் அன்போடு உறவாகிறார்கள். அவர்களிடமும்  சந்தோஷமும், நையாண்டியும், வாழ்வும் இருக்கிறது.

காவியுடை அணிந்த இதர சாமிகள் எல்லாம் பித்தனது விசித்திர நடவடிக்கை கண்டு கண்களை விரிக்கிறார்கள். விலகி நிற்கிறார்கள். ஒரே இடத்தில்  அசையாமல் படுத்து இருக்கிறானாம். அம்மா வந்து வீட்டுக்கு அழைக்கிறார்கள். பெண்ணைப் பற்றிய சித்தர் பாடல் சொல்லி வெறிக்கிறானாம். அம்மா மயங்கிய  வெளியில் அழுதுகொண்டே வீட்டுககுப் போய் அவன் ஒரு சுயம்பு என புரிந்து கொள்கிறாளாம். திரும்பவும் நிற்க.

மலையாளத்தில் இருந்து வெத்திலை வாயோடு ஒருவன் கருப்பு மொட்டையை சந்திக்கிறான். தொழில் அபிவிருத்திக்கு திட்டம் சொல்கிறான்.  இங்கிருப்பவர்களை அங்கும், அங்கிருப்பவர்களை இங்குமாக மாற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். மலைக்கோவிலில் பிச்சையெடுப்பவர்களை கதறக் கதற  முரட்டுத்தனமான மனிதர்கள் தூக்கிச் செல்கிறார்கள். மீதமிருப்பவர்கள் இரவில் அழுகிறார்கள். அடுத்த நாள் கண்ணற்ற பாட்கியை துக்கிச் செல்ல  வருகிறார்கள். அவள் கதறி, திகைத்து ஓடுகிறாள். பித்தன் காலைப் பிடித்துக் கொள்கிறாள்.

பித்தன் அந்த முரட்டு மனிதர்களை தாக்குகிறானாம். வெத்திலை வாயனை துவம்சம் செய்கிறானாம். பிணமாக தோளில் போட்டு அடர்ந்த மரங்களுக்குள்  செல்கிறானாம். காவல் நிலையத்தில் அவன் பாட்டுக்கு உட்கார்ந்திருக்கிறானாம். கோர்ட்டில் ஜட்ஜ் முன்பு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து நான் கடவுள்  என்கிறானாம். இந்த இடத்திலும் நிற்க.

கண்ணற்ற பாடகிக்கு ஒரு சிஸ்டர் ஆறுதலையும், கடவுளின் வார்த்தைகளையும் சொல்லி அனுப்புகிறாள். மொட்டைத் தலையன் அவளைப் பிடித்து வந்து  சித்திரவதைப் படுத்துகிறான். முகத்தில் கல்லை வைத்து அடிக்கிறான். சுவரில் தேய்க்கிறான்.

போலீஸார் ஐந்து நாட்கள் கூடவே இருந்து அவன் குளிப்பதையும், தலைகீழாக நிற்பதையும், கஞ்சா அடிப்பதையும் பார்க்கிறார்களாம். அவன் மேல் தவறு  இல்லை என விடுவிக்கும்படி போலீஸ் சொல்கிறதாம். வெளியே வரும் அவனை கருப்பு மொட்டை பார்க்கிறான். மலைக்கோவில் அருகே பித்தனோடு  சண்டைக்குப் போகிறான். பித்தன் அனாயசமாக அவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறனாம். பாறையில் மோதி கருப்பு மொட்டையிலிருந்து ரத்தம் வருகிறது.

குகைக்குள் பித்தன் தலைகீழாக நிற்கிறானாம். கண்ணற்ற அழகி அவன் முன் தரையில் கிடந்து சிதைந்த முகத்தோடு அழுது புரளுகிறாள். தங்களை ஏன்  கடவுள் இப்படிப்பட்ட பிறவிகளாய் படைத்தான் என்று புலம்புகிறாள்.  எந்தக் கடவுளும் தன்னைக் காபாற்ற வரவில்லையே என்று சத்தம் போடுகிறாள். வாழ  இயலாதவர்களுக்கு மரணம் ஒரு வரம் என குரு சொன்னது அவன் நினைவுக்கு வருகிறதாம். இப்போதும் நிற்க.

வெளியே நிராதரவான மற்றவர்கள் காத்து நிற்கிறார்கள். உள்ளே கழுத்தறுபட்டு கண்ணற்ற பாடகியின் துடிப்புகள் அடங்குகின்றன. பித்தன் அவன் போக்கில்  போய்க் கொண்டு இருக்கிறானாம். இப்போது நீங்களும் தியேட்டரை விட்டுப் போகலாம்.

கதையையும், காட்சிகளையும் வேகமாகச் சொல்லியாகி விட்டது. இனி ‘நான் கடவுள்’ திரைப்படம். பாலா தொடர்ந்து எக்ஸண்ட்ரிக் பாத்திரங்களையே  முன்வைத்து சினிமா எடுத்து வருகிறார். நந்தாவில், அப்படி ஒரு பாத்திரத்தோடு இலங்கை அகதிகள். பிதாமகனில் அப்படியொரு பாத்திரத்தோடு கஞ்சா விற்கும்  கூட்டம். இந்தப்படத்தில் அப்படியொரு பாத்திரத்தோடு உடல் வளர்ச்சியற்ற, சிதைந்த பிச்சை கேட்கும் அசாதாரண மனிதர்கள்.

தமிழ்ச்சினிமாவின் பல கூறுகளை தகர்க்க முடிந்த படத்தில், வில்லன் மற்றும் கதாநாயகன் என்னும் வலைக்குள் வெளிவர முடியாமல் சிக்கித் தவிக்கிறது.  பாட்சா படத்தில் ரஜினி எப்போது வில்லனை அடித்து நொறுக்குவார் என்று காத்திருக்கும் சாமானியனின் எதிர்பார்ப்பை  இந்தப் படத்திலும் வைத்திருக்கிறார்.  டூயட், கடி ஜோக்குகள், ஆபாசம் என தமிழ்ச்சினிமாவின் அத்தியாவசியங்களும், அடையாளங்களும் இல்லைதான். ஆனால் சகிக்க முடியாத வன்முறை  காட்சிகள்.

படத்தில் நடித்த அனைவரையும் கௌரவிக்கலாம். அப்படி கதையோட்டத்தில் பொருந்திப் போகிறார்கள். தம்பி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த பூஜாவா  கண்ணற்ற பாடகி என்று நம்பவே முடியவில்லை. ஆர்யாவின் உடல்மொழியும், கண்களும் மிக முக்கியமானவை படத்தில். வடிவேலுவோடு சட்டை கிழித்துக்  கொண்டு கிறுக்கன் போல வந்து போனவர் இந்தப் படத்தில் எல்லோரையும் அள்ளிக் கொள்கிறார். உடல் குன்றிய மனிதர்களை கடத்தி வந்து பராமரிக்கும்  அவரே இரவில் பாட்டில் வாங்கி வந்து, குடித்து அவர்களோடு அடிக்கும் லூட்டிகள், போதையேறி அவர் நிதானமிழந்ததும் அவர்கள் அவரை வைத்து செய்யும்  கிண்டல்கள், தமிழில் அபூர்வமான காட்சிகள். படத்தில் நகைச்சுவை வலிந்து நலிந்து இல்லை. வசனங்கள் கவனிக்கச் சொல்கின்றன.

காட்சியமைப்புகள் பல இடங்களில் அடர்த்தியாகவும், நேர்த்தியாகவும் பிரமிக்க வைக்கின்றன. பிணங்கள் எரிக்கும் காட்சிகள் கங்கையை வெளிச்சம் போட்டுக்  காட்டுகின்றன. படம் முழுவதும் வெப்பம் தகிக்கிற உணர்வை இளையராஜா தந்திருக்கிறார். அவரின் புலன்களுக்குள் இசை தன்னை மீட்டிக்கொண்டே இருக்கும்  போலும். படத்தில் யாவும், யாவரும் அவர் இசையில்தான் அசைந்து கொண்டிருப்பதாய் படுகிறது. தீயின் வளைவுகளையும், நெளிவுகளையும், துடிப்புகளையும்  படிமங்களாய் காமிரா சொல்லிச் செல்கிறது. வேகம், வேகம், அப்படியொரு வேகத்திலும், கோணத்திலும் பார்வையாளனை திரைக்குள் இழுத்துச் செல்கிறது.  சினிமா என்னும் மொழியில் பாலாவுக்கு பேசத் தெரிந்திருக்கிறது. என்ன பேசுகிறார் என்பதுதான் குழப்பமானது.

படம் முழுக்கவே கடவுள் குறித்த பிம்பங்களும், பிரமைகளும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. மலைக்கோவிலில் கடவுள் வேடத்தில் பிச்சையெடுக்கும்  காட்சியில் “மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க”  பாட்டு ஒலிப்பது அப்படி ஒன்றுதான். ஆனால் பிச்சையெடுக்கும் காட்சி பார்வையாளர்களின் ஆரவாரங்களில்  அமுங்கிப் போகிறது. அந்தப் பாடலை  ‘ரஹிம் சவுண்ட் சர்வீஸ்’ ஒலிபரப்புவது சட்டென்று வந்து ஒரு செய்தியைச் சொல்லிப் போகிறது. முரடர்கள் தங்களைத்  தூக்கிச் செல்ல வருகிறார்கள் என்றவுடன் கடவுள்கள் வேடத்தில் இருப்பவர்கள் பயந்து ஒடுவதும், “நமக்கு ஏன் இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்தான்” என்று  ஒருவர் கேட்க, இன்னொருவர் “தேவடியாப்பயல்” என்று வசை பாடுவதும் என நிறைய இருக்கின்றன. ‘அவர்கள் யாரும் கடவுள் இல்லை, நானே கடவுள்’  என மனிதன் சொல்வதை படத்தின் குரலாக  மிகக் கவனித்து கேட்க முடிகிறதுதான். ஆனால் அது தெளிவாக ஒலிக்கவில்லை.

கதை நிகழும் நிலப்பரப்பை இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஊரற்ற, பேரற்ற வெளியாக இருக்கட்டும் என நினைத்திருக்கலாம். சுலோகங்களும்,  மந்திரங்களும் என நாயகன் அடிக்கடிச் சொல்லும் போது போதுமடா கடவுள் என எரிச்சல் வருகிறது. பெரும் தத்துவங்களை, ஆன்மீகம் குறித்த சாரங்களை  கதைக்கு ஊடாக நிரப்பியிருக்கும் தோற்ற மயக்கத்துக்கா இதெல்லாம். இந்த சுடலைமாடனை கங்கைக்கரையில் இருந்து நம் நிலத்துக்கு அழைத்து வந்திருக்க  வேண்டியதில்லையே என்றுதான் இருக்கிறது. ஒருவேளை பிதாமகன் சாயல் வந்துவிடும் என்று பாலா நினைத்திருக்கலாம்.

கை, கால், முகம், உடல் என உருவங்கள் கலைந்த, கவனம் பெறாத அசாதரண மனிதர்கள்தான் இந்தக் கதையின் முக்கிய மாந்தர்கள்.  “பாரடா இவர்களைப்  பாரடா” என்று நம் மனசாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களது துயரம், அவமானம், வதைகள் எல்லாம் நம் மூளைக்குள் நுழைந்து அரற்றுகின்றன.  குடும்பங்களற்ற அந்த மனிதர்கள் அங்கே குடும்பமாய் பிணைக்கப்பட்டிருப்பதும், அவர்களது கிண்டல் பேச்சுக்களும் நம்மை ஒருவிதத்தில் ஆசுவாசப்  படுத்துகின்றன. நாயகனும், அப்படி ஒரு குடும்பமற்றவன் தான். ஆனால் ஆஜானுபாகுவாய், விஸ்ரூபம் எடுக்கிறவனாய் வந்து நான் கடவுள் என  சமஸ்கிருதத்திலும், தமிழிலும் சொல்வது சுருதி பிசகி ஒலிப்பதாகவேப் படுகிறது. தவறு செய்கிறவர்கள், வாழ முடியாதவர்கள் இருவருக்கும் மரணத்தையே  கடவுள் அளிப்பது செரிக்க முடியாதது.

கண்ணற்ற பாடகிக்கு சகலமும் சிதைந்து போனாலும், அவளது குரல் இருந்ததே.... அந்தக் குரல்வளை அறுத்தா கொல்ல வேண்டும். படம் முடிந்து வெளியே  வருகிற போது அவளது கேள்விகளும், திகைத்து நிற்கும் அசாதாரண மனிதர்களின் முகங்களும் துரத்துகின்றன நம்மையும், ‘நான் கடவுளையும்’. துரத்தும்  படைத்த பாலாவையும். அப்போது இதைவிட, தன் பார்முலாவை விட்டு மீறி, அற்புதமான படப்புகளை அவரால் கொண்டு வர முடியும். அதற்கான ஆகிருதி  அவருக்கு இருக்கிறது.

 

*

கருத்துகள்

30 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மிக விரிவான,சுவையான,அடர்த்தியான விமர்சனம். நன்றி

    பதிலளிநீக்கு
  2. அற்புதமாக இருக்கிறது சார்.. முதல் பாதி கதை சொல்வது ஒருமாதிரியாக இருந்தாலும் இரண்டாம்பாதி கலக்கல்.. படம் சுமார் தான் என்று நண்பர்கள் சொன்னார்கள், கொஞ்சம் அகோரத்தன்மை கலந்திருப்பதாக கூறியிருந்தாலும், படம் எடுத்த விதத்தில் நன்றாக இருக்கிறதா என்று பார்கக்வேணும் தியேட்டர் செல்வேன்... இப்படம் பலரது கடும் உழைப்பு.. அதிலும் ஆர்யா மூன்று வருடங்களைத் தத்து கொடுத்திருக்கிறார்.. அது சிதையாமல் இருக்கவேனுட்ம்..

    இளையராஜாவை குறிப்பிடும் இடத்தில் சிலாகித்தேன்.. ஆயாசமாக வந்து அமர்கிறது வரிகள்.....

    உங்கள் விமர்சனம் நாளையேனும் படம் பார்த்துவிடத் தூண்டுகிறது.. பார்போம்..

    பதிலளிநீக்கு
  3. தோழர் மாதவராஜ்க்கு ,

    கண்ணற்ற பாடகிக்கு சகலமும் சிதைந்து போனாலும், அவளது குரல் இருந்ததே.... அந்தக் குரல்வளை அறுத்தா கொல்ல வேண்டும்//

    படைத்த பாலாவையும். அப்போது இதைவிட, தன் பார்முலாவை விட்டு மீறி, அற்புதமான படப்புகளை அவரால் கொண்டு வர முடியும்//

    மிக சரியாக சொன்னிர்கள் . நமது தமிழ் திரைப்படங்கள் மக்களின் பார்வைக்காகவும் வசுலுக்காகவும் எடுக்கப்படும் பொழுது யதார்த்தமான காட்சிகள் இல்லாமல் போகிறது . நான் திரைப்படம் பார்த்து நீண்ட வருடங்களாக ஆகிறது .
    மிக நல்லபடங்களை பார்த்ததுண்டு பாண்டவர் பூமி , போன்ற சேரனின் படங்கள் , மணிரத்னம் , கமலின் நல்ல படங்கள் போன்றவைகளை
    பாலா, அமீர் , போன்றவைகளின் படங்கள் யதார்த்தம் எனும் பெயரில் வன்முறைகள் ,கொடுரங்களும் தான். படம் பார்த்த பின்பு வாழ்க்கை மீது பயம் வருகிறது . இவர்களின் கதாநாயகர்கள் பொறுக்கிகளும் ரௌடிகளும் தான் . நல்லதை ,நல்லவனை சித்தரிக்காத எல்லா படைப்புகளும் என் பார்வையில் குப்பைகள் தான்

    தோழமையுடன் ஜீவா

    பதிலளிநீக்கு
  4. very nice criticism except the first part of story telling.

    பதிலளிநீக்கு
  5. நல்ல விமர்சனம், பல விமர்சனங்களில் தங்கள் பார்வை வித்தியாசமாய் இருக்கிறது, எல்லோரும் இளையராஜாவை பற்றி எழுதி இருப்பது ஒன்றுபோல் உள்ளது மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது, பாலாவின் இந்த முயற்சி தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்காமல் இருக்கவேண்டும் அப்போதுதான் வித்தியாசமான முயற்சிகள் தொடரும் அதுதான் எனது கவலை

    பதிலளிநீக்கு
  6. ஆதவா!

    வேண்டுமென்றேதான் அப்படி கதை சொன்னேன். நாயகனை விசித்திர வல்லமை படைத்தவனாக சித்தரிக்கிற இடங்களை வேறு தொனியிலும், அவன் வந்து சேர்கிற இரத்தமும் சதையுமான மனிதர்களை வேறு ஒரு தொனியிலும் சொல்ல வேண்டும்போல் இருந்தது.

    பதிலளிநீக்கு
  7. ஜீவா!

    விளிம்புநிலை மனிதர்கள் சித்த்ரிக்கிற படங்கள் நிறைய வேண்டும். பொறுக்கிகள், ரௌடிகள் என்று இந்த அமைப்பு பெயர் சூட்டி தள்ளி வைத்திருக்கிறவர்களும் மனிதர்களே.லும்பன்கள் எனச் சொல்லப்படுகிற அவர்களின் வாழ்வை இயல்பான தொனியில் சொல்வதை விட்டு விட்டு, நான் போலீஸ் இல்ல... பொறுக்கி என்று சொல்லி, அவனை நாயகனாக்குகிற சினிமாக்கள் இங்கு வேறு சில பிம்பங்களை உருவாக்கி விடுகின்றன. நிஜத்தில் போலீஸ், பொறுக்கிகளை விட மோசமே. அதுதான் பார்வையாளன் கைதட்டுகிறான். ஆயுதங்களைக் காட்டாமல் யதார்த்தங்களில் இந்த பாத்திரங்கள் சொல்லப்படும் போது பெரும் தாக்கத்தையும், கனத்தையும் ஏற்படுத்தும் நிச்சயமாய்.

    பதிலளிநீக்கு
  8. மாதவன்!

    ஆதவா அவர்களுக்கு நான் சொன்ன பின்னூட்டத்தை படிக்க வேண்டுகிறேன். தங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. தவநெறிச்செல்வன்!

    படம் குறித்து இன்னும் சொல்ல வேண்டியது இருக்கிறது. படத்தைப் பாருங்கள்.தங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ஒரு சின்ன வேண்டுகோள்.

    விமர்சனம் என்ற பெயரில் முழுக்கதையையும் சொல்லாதீர்கள். நீங்கள் எப்படி ‘புதியதாக’ படத்தை பார்த்தீர்களோ அது போன்ற அனுபவம் உங்கள் விமர்சனத்தை படிக்கிறவர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீதர் நாராயணன்!



    கதைச் சுருக்கம்தான், என் விமர்சனம் புரிவதற்காக முன்வத்தேன். இனி சொல்லும் முறையில், அதைத் தவிர்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. கடையம் ஆனந்த்!
    தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. //கதைச் சுருக்கம்தான், என் விமர்சனம் புரிவதற்காக முன்வத்தேன். இனி சொல்லும் முறையில், அதைத் தவிர்க்கிறேன்.
    //

    When you write about the story or scenes, in the beginning of the article, please mention like, "Warning: Spoilers ahead". This would warn the reader in advance.

    பதிலளிநீக்கு
  15. படத்தைப்பற்றிய உங்களின் பார்வை வித்தியாசமாக இருந்தது.

    குறிப்பாக
    //சினிமா என்னும் மொழியில் பாலாவுக்கு பேசத் தெரிந்திருக்கிறது. என்ன பேசுகிறார் என்பதுதான் குழப்பமானது. //

    நச்

    பதிலளிநீக்கு
  16. Anonymous!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. மஞ்சூர் ராஜா!

    நீங்களும் வந்திருக்கீங்களா? சந்தோஷமாகவும், உர்சாகமாகவும் இருக்கிறது. கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. 'சினிமா என்னும் மொழியில் பாலாவுக்கு பேசத் தெரிந்திருக்கிறது. என்ன பேசுகிறார் என்பதுதான் குழப்பமானது'

    You are confused because what he speaks does not fit into your understanding.The problem is with you, not with him.

    பதிலளிநீக்கு
  19. 'வசனங்கள் கவனிக்கச் சொல்கின்றன'

    Why are you so reluctant to write the name of the dialog writer- Jeyamohan.What prevents you from acknowledging the fact that this film is based partially on his novel - Ezham Ulagam.

    பதிலளிநீக்கு
  20. anonymous!

    தவறு செய்கிறவர்களுக்கும் மரணம். வாழ முடியாதவர்களுக்கும் மரணம். இது சரியா. நான் என்ன குழம்பிப் போயிருக்கிறேன் என்று தெளிவாகச் சொல்லுங்கள்.

    ஜெயமோகனின் ஏழாம் உலகம் தழுவல் என்பதும், அவர்தான் வசனம் என்பதும் நான் விமர்சனம் எழுதிய பிறகுதான் தெரியும். படத்தின் டைட்டில் போட்ட பிறகுதான் தியேட்டருக்குள் நுழைந்தேன்.

    வசனம் தாண்டியும் ஜெயமோகன் இருந்திருகிறாரா..?இப்போது புரிகிறது.... கங்கைக் கரையில் இருந்து யார் சுடலமாடனை அழைத்து வந்திருப்பார் என்பதும், யார் கண்ணன் யார் அர்ச்சுனன் என்பதும், யார் பாலாவை குழப்பி இருப்பார் என்பதும்.

    தெளிவு படுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லாப்பூச்சியும்
    யாரெனப்புரிந்துவிட்டது

    பதிலளிநீக்கு
  22. dear mathav

    congrates for your century so early so effortlessly.....
    Your discussion on Naan Kadavul was par excellant. very well worded and your keen analysis is striking and amazing.....I am yet to view the film, but you must have checked with the story/dialogue etc., before getting ready to write on the film... or you may update your write up now...

    s v venugopalan

    பதிலளிநீக்கு
  23. // இன்னொருவர் “தேவடியாப்பயல்” என்று வசை பாடுவதும் என நிறைய இருக்கின்றன,//

    அவர் வேராயாரும் இல்லை
    கவிஞர் விக்ரமாதித்தியாதான்

    பதிலளிநீக்கு
  24. மாதவ்,

    படம் இன்னும் பார்க்காததால் பல்வேறு விமர்சனங்களைப் படித்து வாய் பிளந்து நிற்பதோடு சரி. இளையராஜா பற்றி மட்டும் ஒருமித்த கருத்து இருப்பதில் மகிழ்ச்சி. ஆனால் அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

    ஸ்ரீதர், பொதுவாக ஆங்கிலப் பத்திரிகைகளில், ஊடகங்களில் விமர்சனம் என்பது முழுக் கதையையும் சொல்லிவிட்டு, பிறகு முழுதும் அலசுவது என்பதே நான் அறிந்தவரையில் நடப்பது. இந்தியாவில் மட்டுமே (குறிப்பாக தமிழில்) கதையைச் சொல்லக் கூடாது என்பதில் மிகக் கவனம் செலுத்துவோம். எந்த வகை விமர்சனம் சரி? விமர்சனம் என்பது படத்தைப் பார்த்தவர்களுக்கா, பார்க்காதவர்களுக்கா?

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  25. வேணுகோபால்!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. கார்த்திக்!

    ஆமாம். அதை நான் பிறகுதான் தெரிந்து கொண்டேன். கவிஞர் விக்கிரமாதித்தன் இப்படி அடங்கி நடித்திருப்பது ஆச்சரியமான விஷயமே!

    பதிலளிநீக்கு
  27. அனுஜன்யா!

    நான் ஒன்றும் தவறு செய்து விடவில்லை என்று இப்போது நிம்மதியாய் இருக்கிறது. கொஞ்சம் முன்னாலேயே நீங்கள் வந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  28. Congratulation......
    For ur Century Articles...
    Padaipaalikku, Oru Padaipaaliyin Purithal......Bala kku....

    பதிலளிநீக்கு
  29. தீபா!

    வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியவரிடம் பாராட்டு பெறுவது என்ன சும்மாவா? வாழ்த்துக்களை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!