வாழ்க நீ எம்மான்!

barathi டிசம்பர் 11 என்றவுடன் தமிழ் இலக்கிய உலகம் சட்டென்று  பாரதியின் பிறந்தநாள் என்று நினைவுபடுத்திக் கொள்கிறது. இன்று பல ஊர்களில், பல்வேறு அமைப்புகள் பாரதியை நினைவுபடுத்தி  நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். மீசையும், பொட்டும், முண்டாசுக்கட்டும் பாரதியின் அடையாளம் கொண்ட அழைப்பிதழ்களை பார்க்க முடியும். பாரதியின் கவிதை வரிகள் உச்சரிக்கப்படும். எட்டையபுரத்தில் பாரதி பிறந்த வீட்டிற்கு பார்வையாளர்கள் வந்து செல்வார்கள்.


இப்படி ஒரு சொந்தமும் நெருக்கமும் பாரதிக்கே வாய்த்திருக்கிறது. யோசித்துப் பார்க்கும்போது, இது எவ்வளவு ஆச்சரியமான, அற்புதமான விஷயம் என்பது புலப்படும்.

 

தான் வாழ்ந்த காலத்தில், இருந்த சமூகத்தின் மீது, சக மனிதர்கள் மீதும் அவர் வைத்திருந்த காதலே கவிதைகளாக வெளிப்பட்டது. இருந்த அமைப்பை எள்ளி நகையாடியும், கோபப்பட்டும் வெளிப்படுத்திய எழுத்துக்களே கவிதைகளாக பரிணமித்தது. மாற்றம் குறித்து அவருக்குள் துடித்த சிந்தனைகளே கவிதைகளாக இன்றைக்கும் உயிர் கொண்டிருக்கின்றன.

 

ஒரு மனிதனின் எல்லாப் பருவங்களுக்குள்ளும் பாரதியால் தொடர்ந்து வசிக்க முடிவதுதான் அவரது மகத்துவமாக இருக்கிறது. "ஓடி விளையாடு பாப்பாவிலிருந்து'  தொடங்கி "நிற்பதுவே பறப்பதுவே" என அவர் சகல தருணங்களிலும் நம்மோடு வந்து கொண்டே இருக்கிறார்.

 

பாரதியின் 'எந்தையும் தாயும்' பாடலை தனிமையில் உச்சரித்துப் பாருங்கள், உங்களுக்குள் ஒரு மின்சாரம் பாயும். ஏராளமான வாத்தியக் கருவிகளோடு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தாலும் "வந்தே மாதரம்' உருவாக்க முடியாத உணர்வு அது. பிழைப்புக்காக எழுதாமல், தன் ஆன்மாவை வார்த்தைகளுக்குள் பொதிந்து வைத்து நாடி நரம்புகளிலிருந்து வரிகளை உருவி எடுத்த கவிதைகளே காலத்தையும், மனித இதயத்தையும் வென்றுவிடுகின்றன.

 

பாரதி அதைத்தான் செய்திருக்கிறார்.

 

அவரைப் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. சிறியவன் எனக்கு இந்த நாளில், இந்த நேரத்தில் தோன்றியது இது.

 

வாழ்க நீ எம்மான்!

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மாதவராஜ்,
    நலமா இருக்கீங்களா? சாத்தூரில் தான் இருக்கீங்களா?

    raamkiku at gmail dot com என்ற முகவரிக்கு தனி மடல் எழுதுங்கள்.. குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்..

    பதிலளிநீக்கு
  2. மகாகவியின் பிறந்தநாள் குறித்து எந்த ஊடகங்களிலும் குறிப்பிடும்படியாக எந்த செய்தியும் வெளியிட்டிராத நிலையில், இன்னும் அவரை நினைவில் பலர் நினைவில் வைத்திருக்கக் கூடும் என்கிற நம்பிக்கை, உங்களது பதிவைப் படித்ததும் எனக்கு ஏற்பட்டது. மிக்க நன்றி.

    வேணு

    பதிலளிநீக்கு
  3. ஆஹா!

    ராமகிருஷ்ணன் அவர்கள் தானே!
    'ஜென்ராம்' ஆக அவ்வப்போது ஜூனியர் விகடனில் வாசித்திருக்கிறேன்.
    உங்கள் வருகை சந்தோஷமாக இருக்கிறது.
    ஆறுமுகனேரி ஞாபகங்கள் அலைமோதுகின்றன.
    இதோ இ-மெயிலில் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வேணு!

    உங்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய விதத்தில் இந்தப் பதிவு இருந்தது சந்தோஷம்.
    இந்த விவஸ்தை கெட்ட ஊடகங்களை நம்பியா மகாகவி?
    சாத்தூரில் நாங்கள் பாரதி பிறந்த நாளின் போது, மெயின் ரோட்டில் பாரதி படத்தை வைத்து, பாரதியின் பாடல்களை ஒலிபரப்பி, ரோட்டில் போகிற வருகிறவர்க்கெல்லாம் இனிப்பு வழங்குவோம். இந்த வருடம், நண்பர்கள் கூடி திட்டமிடவில்லை. அந்த வருத்தத்தை எனக்குள்ளே தேற்றிக் கொள்ளத்தான் எழுதினேன். அடுத்த வருடம் மிகச் சிறப்பாய் கொண்டாட வேண்டும். தமிழகம் முழுவதும் அப்படி கொண்டாடும்போது, இந்த ஊடகங்கள் அப்போது, "இன்று மகாகவி கொண்டாட்டங்கள்" என்று கத்திக்கொண்டு வருவார்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஊடகங்களைக் குறை சொல்லாதீர்கள். அவர்கள் என்ன செய்வார்கள், பாவம். தமிழக அரசு பாரதியார் பிறந்த நாள விடுமுறையாக அறிவித்திருந்தால் "பாரதி பிறந்த நாளை முன்னிட்டு" என்று குத்தாட்டங்களும் கலையம்சங்களும் நிறைந்த பிரபல ஹீரோவின் புத்தம்புதிய படம் ஒன்றைத் திரையிட்டுத் தங்கள் த்மிழ்ப் பற்றையும் பாரதி பற்றையும் பறை சாற்றியிருப்பார்கள். அல்லது த்மிழ் கூறும் நல்லுலகுக்குக் கலைச்சேவை புரிய வந்த ந்டிகையர் திலகங்களைப் பேட்டி காணுவார்கள்.

    இப்படிப்பட்ட ஊடகங்கள் பாரதியாரை மறந்திருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  6. தீபா!

    ஆமாம். அதுவும் நல்லதுக்குத்தான். சுதந்திரதினம் படுகிற பாடு போதாதா, என்ன?

    பதிலளிநீக்கு
  7. ///தான் வாழ்ந்த காலத்தில், இருந்த சமூகத்தின் மீது, சக மனிதர்கள் மீதும் அவர் வைத்திருந்த காதலே கவிதைகளாக வெளிப்பட்டது. ///

    அதுவே இப்போது எமக்கு வழிகாட்டியாக உள்ளது..

    அதைப் பின்தொடர்தலே நாம் அவருக்கு செய்யும் கொளரவம் என நினைக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  8. பாரதி எப்போதுமே உணர்வு மிகுதியான கருவி.
    எந்தையும் தாயும் தனிமையில் பாடிப்பார்க்கிறபோது
    எல்லாமே பற்றிக்கொள்ளும். மூததையர், பெற்றோர்கள்
    மண் என எல்லாமே.
    மிக அருமை

    பதிலளிநீக்கு
  9. தங்கராசா ஜீவராஜ்!
    பாரதி நம் எல்லோருக்கும் வழிகாட்டி.

    //அதைப் பின்தொடர்தலே நாம் அவருக்கு செய்யும் கொளரவம் என நினைக்கிறேன்....//

    நிச்சயமாக!

    பதிலளிநீக்கு
  10. காமராஜ்!

    நன்றி என் அருமைத் தோழனே...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!